

சென்னை: காணும் பொங்கல் பாதுகாப்புப் பணியில் சென்னையில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மெரினாவில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் கடற்கரை, பூங்கா உட்பட பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்வது வழக்கம்.
மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க காவல் ஆணையர் அருண் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். குறிப்பாக நகர் முழுவதும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுடன் 1,500 ஊர்க்காவல் படையினர் ஒருங்கிணைந்து பணியாற்ற உள்ளனர்.
மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்படும்.
அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
மணற்பரப்பில் பாதுகாப்பு: உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களுக்கு வாக்கி டாக்கி, மெகா போன், பைனாகுலர் வழங்கப்படும்.
பைனாகுலர் மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்குவார்கள். மேலும் 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
காணும் பொங்கல் அன்று மெரினாவில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்க கடற்கரை யோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குதிரைப் படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய சிறப்பு வாகனம் மூலம் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிக்கப்பட உள்ளது.
பிரத்யேக அடையாள பட்டை: கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் கைகளில் பிரத்யேக அடையாளப் பட்டை (பேண்ட்) கட்டிவிடப்பட உள்ளது. குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் விவரங்கள் பெறப்பட்டு, பிரத்யேக அடையாளப் பட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பிவைப்பார்கள்.
ட்ரோன் கேமராக்கள்: மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் 4 ட்ரோன் கேமராக்கள் என மொத்தம் 8 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும் அதிக திறன் கொண்ட ஏஐ ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு அவை மூலம் கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கைத் தகவல்கள் ஒலிபரப்பப்படும்.
இதர பாதுகாப்பு ஏற்பாடுகள்: பொதுமக்கள் அதிகளவில் கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலைக் கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்து வருகின்றனர்.
இதேபோல் பைக் ரேஸ் மற்றும் சாகசத்தை தடுப்பதற்காக கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.