Published : 10 Sep 2014 11:15 AM
Last Updated : 10 Sep 2014 11:15 AM

நெல்லை மேயர் புவனேஸ்வரி தேர்வுக்கு எதிராக வழக்கு: மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்

நெல்லை மாவட்டம், மேலப் பாளையத்தைச் சேர்ந்த செய்யது அலி பாத்திமா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட செப். 4-ல் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தேன். செப். 5-ல் எனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என்பதால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக காரணம் கூறினர்.

வேட்புமனுவுடன் எனது வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் எனது பெயர் உள்ள வாக்காளர் பட்டியலின் நகல் ஆகியவற்றை நான் இணைத்திருந்தேன். ஆனால், போலியாக காரணம் கூறி எனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். பின்னர், எனது பெயர் இல்லாமல் மேயர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நெல்லை மாநகர மேயராக புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக செப்.8-ல் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

எனது வேட்புமனுவை ஏற்க உத்தரவிட்டு, ஏற்கெனவே அறிவித்தபடி செப். 18-ல் மேயர் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பாக செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவுக்கு பதிலளிக்க நெல்லை மாவட்ட ஆட்சியர், தேர்தல் அதிகாரி மற்றும் மேயராகத் தேர்வு செய்யப்பட்ட புவனேஸ்வரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x