

திருச்செந்தூர் கோயிலில் கனிமொழி எம்.பி.யின் தாயார் ராஜாத்தி அம்மாள் நேற்று சண்முகார்ச்சனை செய்து வழிபட்டார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது தாயாரும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் துணைவியாருமான ராஜாத்தி அம்மாள் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
காலை 9 மணியளவில் கோயிலுக்கு வந்த அவர் முதலில் மூலவரை தரிசித்தார். தொடர்ந்து, தனது மகள் கனிமொழி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி உற்சவ மூர்த்தியான சண்முகர் சன்னதியில் சிறப்பு சண்முகார்ச்சனை செய்து வழிபட்டார். முன்னாள் அமைச்சர் தமிழரசி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.