Published : 13 Mar 2019 03:40 PM
Last Updated : 13 Mar 2019 03:40 PM

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து விளக்கம் கோரி தமிழக டிஜிபி ராஜேந்திரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (27). அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24) ஆகியோருடன் சேர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை மடக்கி அவர்களைப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். அதைக் கொண்டு அந்தப் பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் போலீஸார் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு தலைமறைவானார். கடந்த 5-ம் தேதி திருநாவுக்கரசை மாக்கினாம்பட்டியில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், "பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் மீது குண்டாஸ் - என்ற செய்தியை தேசிய மகளிர் ஆணையம் கவனித்தது.

12.03.2019 அன்று இச்செய்தி பல்வேறு ஊடகங்களின் வாயிலாக எங்களுக்குத் தெரியவந்தது.

பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என பலரும் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு அந்த காட்சிகள் வீடியோக்களாகவும் எடுக்கப்பட்டு பின்னர் அவர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்ததாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தருணத்தில், தமிழக பெண்களின் பாதுகாப்பு மீது தேசிய மகளிர் ஆணையம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது.

இந்த சம்பவத்தின் தாக்கத்தை உணர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரின் மீதும் உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

அதேபோல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக விளக்கி அறிக்கை ஒன்றை தேசிய மகளிர் ஆணையத்துக்கு சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x