

செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் ரயில்வே தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடத்தப்படுகின்றன. இதற்கான அறிமுக வகுப்பு மார்ச் 17-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பி.டீ.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற உள்ளது.
ரயில்வே துறையில் பிளஸ் 2 படிப்பை அடிப்படைக் கல்வித் தகுதியாகக்கொண்ட இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை நேரக் காப்பாளர், ரயில் எழுத்தர், வணிகவியல் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர் ஆகிய பதவிகளில் 10,628 காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
பட்டப் படிப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்ட போக்குவரத்து உதவியாளர், சரக்குக் காப்பாளர், முதுநிலை வணிகவியல் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலைக் கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை நேரக்காப்பாளர், வணிகவியல் உதவியாளர், நிலைய மேலாளர் ஆகிய பதவிகளில் 24,649 காலிப்பணியிடங்களும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
தகுதியுள்ள நபர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, இருதேர்வுகளுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட இதர விவரங்களை இணையதளத்தில் விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் ரயில்வே தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சியை செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை வழங்குகிறது.
இது தொடர்பாக செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இந்தியன் ரயில்வே அறிவித்துள்ள 2019க்கான 35,227 எழுத்தர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் நடைபெற உள்ளதால் பி.டீ.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளியில் தகுதி படைத்தவர்களுக்கு (பிளஸ் 2 மற்றும் இளங்கலை பட்டம் முடித்தவர்கள்) இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது.
இதற்கான இலவச அறிமுக வகுப்பும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறை குறித்தும் வரும் 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள பி.டீ.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடத்தப்படும்.
விருப்பமுள்ளவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 10.30 மணிக்குள்ளாகப் பதிவு செய்து பங்கேற்று பயன்பெறலாம். சிறப்புப் பள்ளியின் தொலைபேசி எண்கள் 044-26430029, 8668038347 மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.