Published : 09 Mar 2019 07:59 AM
Last Updated : 09 Mar 2019 07:59 AM

தத்கால் முன்பதிவின்போது தாமதம் ஏற்படுவதாக புகார்; விநாடிக்கு 4 ஆயிரம் டிக்கெட்களை முன்பதிவு செய்ய சர்வரின் தரம் உயர்வு: ஐஆர்சிடிசி நடவடிக்கை

ஐஆர்சிடிசி இணையதளத்தில் விநாடிக்கு 4 ஆயிரம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வகையில் சர்வரின் தரத்தை உயர்த்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ரயில்களில் முன்பெல்லாம் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில்தான் கூட்டம் அலைமோதும். ஆனால், இப்போதெல்லாம் விரைவு ரயில்களில் தினமும் டிக்கெட் விற்று தீர்ந்து விடுகிறது.

இணையதள வசதியுள்ள நவீன செல்போன் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதால், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐஆர்சிடிசி இணையதளதில் டிக்கெட்களை முன்பதிவு செய்கின்றனர். தினமும் சராசரியாக 8 லட்சம் பேர் இந்த இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

ரயில் டிக்கெட் மட்டுமல்லாமல், ரயில் நிலையங்களில் வைஃபை, பேட்டரி கார், ஓய்வு அறைகள் உள்ள பட்டியல், உணவுகளை ஆர்டர் செய்யும் வசதி, கால்டாக்ஸி புக்கிங் வசதி, செல்போன் செயலி மூலம் சேவை பெறும் வசதி, ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் மற்றும் அதன் விலைப் பட்டியல், விடுமுறை நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட விபரங்களும் இடம்பெற்றுள்ளதால், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

அதேநேரத்தில் தத்கால் டிக்கெட் முன்பதிவின்போது அடிக்கடி சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சர்வரின் வேகம், தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கையை ஐஆர்சிடிசி எடுக்கவுள்ளது.

விரைவில் தொடக்கம்

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது:ஐஆர்சிடிசி இணையதளத்தில் தற்போதுள்ள நிலவரப்படி, ஒரு விநாடிக்கு 2,500 டிக்கெட்களை எடுக்கும் வசதியுள்ளது. இந்த இணையதளத்தில் மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சில நேரங்களில் சர்வர் பிரச்சினை ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடந்தரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் இந்த புகார் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனவே, ஒரு விநாடிக்கு 4,000 டிக்கெட் பெறும்வகையில் சர்வரின் தரத்தைஉயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை விரைவில் தொடங்குவோம். இந்த ஆண்டு இறுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x