Published : 02 Mar 2019 09:00 PM
Last Updated : 02 Mar 2019 09:00 PM
எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வீடுகளில் புகுந்து கேஸ் சிலிண்டர்களை மட்டுமே திருடிவந்த நபர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 17 சிலிண்டர்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, எம்.ஜி.ஆர்.நகர், புலித்தேவன் தெருவில் வசிக்கும் ராம்குமார் (38). கடந்த 28-ம் தேதி இவர் வீட்டில் சிலிண்டர் மட்டும் காணாமல் போனது. இதுகுறித்து அவர் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சமீப காலமாக அப்பகுதியில் சில வீடுகளிலிருந்து சிலிண்டர்கள் மட்டுமே திருடுபோவதாக புகார்கள் வந்தது. புகாரை பதிவு செய்து காணாமல்போகும் சிலிண்டர்களை கண்டுபிடிக்க, எம்.ஜி.ஆர்.நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் புகார்தாரர் ராம்குமார் வீட்டின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, டிப்டாப் உடையில் இருந்து நபர் ஒருவர் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் சிலிண்டரை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
அதன்பேரில், அதில் தெரிந்த குற்றவாளியின் உருவத்தை வைத்து, தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீஸார் சிலிண்டர்களை திருடிய பாண்டிச்சேரி தவளைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (38) என்பவரை இன்று காலை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 17 சிலிண்டர்கள் மற்றும் மேற்படி திருட்டுக்கு பயன்படுத்திய ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT