Published : 01 Mar 2019 07:04 PM
Last Updated : 01 Mar 2019 07:04 PM

தைரிய விங் கமாண்டர் அபிநந்தன் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கின்றனர்: பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பேச்சு

பாகிஸ்தானில் பிடிபட்டு விடுவிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் குறித்து கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி, அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் என்றார்.

 

ரூ.40 ஆயிரம் கோடி குமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று குமரி மாவட்டம்  வந்தார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.

 

பின்னர் விழா தொடங்கியது. விழாவில் பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார்.

 

ஆளுநர், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விழா மேடையில் உள்ளனர்.

 

விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது “இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்ஜி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.  தைரிய விங் கமாண்டர் அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கின்றனர்.” என்றார்.

 

அவர் மேலும் பேசிய போது,  “உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. மக்கள் விரும்புவது முன்னேற்றத்தை, வாக்கு வங்கி அரசியலை அல்ல.

 

மக்கள் குடும்ப அரசியலை விரும்பவில்லை, முன்னேற்றத்தையும், நேர்மையான அரசியலையும் விரும்புகிறார்கள். மக்களின் வாக்குகளை பெற்ற முந்தைய அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

 

விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் கடனை தள்ளுபடி செய்வோம் என்கிறார்கள். லீப் ஆண்டு வருவது போல், விவசாயிகளுக்கான காங்கிரசின் திட்டமும் உள்ளது. சிறு விவசாயிகளுக்கு வாழ்வாதார திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம், 1.10 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது மத்திய அரசின் திட்டம் 24 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிக வேகமாகச் செயல்படுகிறது.  தேர்தலின்போது விவசாயக்கடனை தள்ளுபடி செய்யும் காங்கிரஸ் அதன்பிறகு அவர்களை பற்றி கவலைப்படாது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு  பெரும்பான்மையோடு இந்த அரசு 2014-ல் அமைந்தது. துணிச்சலாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் அரசு தேவை என்பதை மக்கள் தெளிவாகத் தெரிவித்திருந்தனர்.

 

அண்மையில் ராணுவத்தின் செயல்பாடுகள் அதன் வலிமையை  எடுத்து காட்டுவதாக உள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. நாடே பாராட்டினாலும் சிலர் ராணுவத்தின் நடவடிக்கைகளை சந்தேகிக்கிறார்கள். நடுத்தர மக்களை பற்றி முந்தைய அரசு சிந்திக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முந்தைய அரசு எதையும் செய்யவில்லை.

 

நான் இன்று இருப்பேன் நாளை சென்று விடுவேன். இந்தியா எப்போதும் இருக்கும்.  தற்போது தீவிரவாதத்திற்கு பயந்தவர்களாக நாம் இருக்கவேண்டியதில்லை, பயங்கரவாதத்திற்கு எதிராக வட்டியும் முதலுமாக திருப்பி தரப்படும்.  அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பினை பலவீனம் அடைய செய்து விடாதீர்கள்.

 

ராணுவ வீரர்களின் ஒரே தகுதி, ஒரே ஓய்வூதியம் பற்றி முந்தைய அரசு கண்டுகொள்ளவில்லை. சிந்தித்துகூட பார்க்கவில்லை. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக, ஒரே ரேங்க், ஒரே ஓய்வூதியம் எனும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தியது. நாட்டில் ஊழல் செய்தவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்திய மக்கள்தான் என் குடும்பம், அவர்களுக்காக வாழ்வேன்.” என்று பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x