Published : 28 Mar 2019 11:05 AM
Last Updated : 28 Mar 2019 11:05 AM

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தியை இன்று நீந்தி கடக்கும் தேனி தனியார் பள்ளி மாணவர்

தேனியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஆர். ஜெய் ஜஸ்வந்த் சுமார் 30 கி.மீ தூரம் கொண்ட தலைமன்னார்- தனுஷ்கோடி இடையிலான பாக் ஜலசந்தி கடற் பகுதியை இன்று நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார்.

தேனி மாவட்டம் அல்லி நகரைச் சேர்ந்த ரவிக்குமார்-தாரணி தம்பதியின் மகன் ஆர். ஜெய் ஜஸ்வந்த் (10). நீச்சல் வீரரான இவர் 2016-ம் ஆண்டிலிருந்து மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மாணவர் ஜெய் ஜஸ்வந்த் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடற்பகுதியை இன்று (வியாழக்கிழமை) நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார்.

இதற்காக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஒரு விசைப்படகு, ஒரு நாட்டுப்படகில் மாணவர் ஆர். ஜெய் ஜஸ்வந்த், அவருடன் மீனவர்கள் மற்றும் பயிற்சியாளர் எம். விஜயக்குமார் ஆகியோர் நேற்று மதியம் தலைமன்னாருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இன்று அதிகாலை இலங்கை யிலுள்ள தலைமன்னாரில் இருந்து நீந்தத் தொடங்கி இந்தியாவின் தனுஷ்கோடி வரையிலான 30 கி.மீ. தூர பாக். ஜலசந்தி கடலை நீந்தி இன்று பிற்பகல் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இதற்காக இந்தியா மற்றும் இலங்கை அரசுகளிடம் அனுமதி பெற்றுள்ளார். இந்தச் சாதனையை செய்தால் மிகக் குறைந்த வயதில் பாக். ஜலசந்தி கடலை நீந்திக் கடந்தவர் என்ற சாதனையைப் படைக்க முடியும்.

    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x