Published : 28 Mar 2019 09:50 PM
Last Updated : 28 Mar 2019 09:50 PM

சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகளே ஓட்டுக்காக பணம் கொடுக்கிறார்கள்: ஊழல்வாதிகளை தேசவிரோதிகளாக அறிவிக்கவேண்டும்: உயர் நீதிமன்றம்

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தில், கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சரவணன் என்பவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு வருவாய் கோட்டச்சியார் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சஸ்பெண்டை மறு ஆய்வு செய்யும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, சரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர் கொள்ள வேண்டியுள்ளதாகவும், கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்கு பதிலாக இச்சைக்கு இணங்க செய்யும் துரதிருஷ்டவசமான நிலையும் உள்ளதாக வேதனை தெரிவித்தார்.

லஞ்சம் என்பது சமுதாயத்தில் சாதாரண விஷயமாகிவிட்டது எனவும், சமீபத்தில் ஒட்டுக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து பரவலாக பேசப்படுகிறது எனவும் குறிப்பிட்ட நீதிபதி, சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளே ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்து விடும்.

வாக்கின் புனிதத்தை சில வாக்காளர்கள் உணர்வதில்லை எனவும் குற்றம் சாட்டினார். ஊழலுக்கு எதிராக போராடும் பாண்டவர்களை, ஊழல்வாதிகளான கவுரவர்களிடம் இருந்து நீதிமன்றங்கள் தான் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கு அல்ல என கூறினார்.

ஊழல் செய்யும் நீதித்துறை அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் எனவும், இவர்களால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x