Last Updated : 28 Mar, 2019 11:05 AM

 

Published : 28 Mar 2019 11:05 AM
Last Updated : 28 Mar 2019 11:05 AM

தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த கட்சி வேட்பாளர் பெயரில் சுயேச்சைகள் போட்டி

விருதுநகர், சாத்தூர் தொகுதிகளில் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சி வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி, சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக, திமுக ஆகியவை கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றன. அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகளும் களமிறங்கியுள்ளன.

இத்தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சி வேட்பாளர் பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆர்.அழகர்சாமி பெயரை போன்றே எம்.அழகர்சாமி, என்.அழகர்சாமி என சுயேச்சைகள் இருவர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் என்.அழகர்சாமி வேட்பு மனு மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, சாத்தூரில் திமுக வேட்பாளராக கோசுக்குண்டு வே.சீனிவாசன் போட்டியிடுகிறார். இவர் பெயரிலேயே மு.சீனிவாசன், ரா.சீனிவாசன், கொ.சீனிவாசன், பூ.சீனிவாசன் என 4 சுயேச்சை வேட்பாளர்களும், அதேபோன்று, அமமுக சார்பில் போட்டியிடும் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் பெயரிலேயே க.சுப்பிரமணியன், ரா.சுப்பிரமணியன், எஸ்.சுப்பிரமணியன், மற்றொரு க.சுப்பிரமணியன், மற்றொரு ரா.சுப்பிரமணியன் என 5 சுயேச்சை வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படும். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் பிரிந்து, இந்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. எனினும், இம்முறை வேட்பாளர்களின் பெயருக்கு அருகே அவர்களின் புகைப்படம் இடம்பெறும் என்பதால், இதுபோன்ற குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை என தெர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x