Last Updated : 07 Mar, 2019 10:00 AM

 

Published : 07 Mar 2019 10:00 AM
Last Updated : 07 Mar 2019 10:00 AM

அறிவியல் விழிப்புணர்வில் அசத்தும் ஆசிரியர்!

கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் உடுமலையைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை  அடுத்துள்ள ராகல்பாவி என்ற கிராமத்தில், அரசுப்  பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு, ஓய்வு நேரத்தில் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகிறார் ஜி.கண்ணபிரான் (32). பி.எஸ்சி. (கணிதம்), பி.எட்.  பயின்றுள்ள இவர், இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது முயற்சியால் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

தான் பணியாற்றும் பள்ளி மட்டுமின்றி,  தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 1,000-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரிடம் பேசினோம்.

“2008-ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். `கலிலியோ அறிவியல் கழகம்’ என்ற அமைப்பின் மூலம், எளிமையான முறையில்  கணக்கு போடுவது என்பது குறித்தும், அன்றாட வாழக்கையில் பார்க்கும் பொருட்களை வைத்து அறிவியல் ஆய்வு செய்வது குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

வானியல் அற்புதங்கள்!

120 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும்,  வானியல் அற்புதமாகக் கருதப்படும் புதன் இடைமறைப்பு, ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் ஐசான் வால்நட்சத்திரம் குறித்தெல்லாம் மாணவர்களுக்கு விளக்குகிறேன்.

2012-ல் உலகம் அழிந்து விடும் என பரவிய புரளிக்கு  எதிராக, அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். 2014-ல் மாணவர்களிடையே ராக்கெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,  பேப்பரில் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளை பட்டாசு மூலம் பறக்கவிடும் செயல்முறை விளக்கத்தைக் கற்றுக்கொடுத்தேன்.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பிரச்சார் மையம் மற்றும்  சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றுடன் இணைந்து, பலவகையான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். `சூரியனில் உள்ள கரும்புள்ளிகளை எவ்வாறு  அறிந்து கொள்வது? இரவு, பகல் சமமாக வருவது எப்போது?’ என்பது குறித்து விளக்கினோம். உலகம் முழுவதும் மார்ச் 22, செப்டம்பர் 23-ம்

தேதிகளில் பகலும், இரவும் சம அளவில் இருக்கும். இதில் உள்ள அறிவியல் என்ன?  இவற்றை நம் அன்றாட செயல்கள் மூலம் எவ்வாறு அறிந்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

டெலஸ்கோப்

சில மாதங்களுக்கு முன் பஞ்சாப்பில் உள்ள புஷ்ப குஜ்ரால் அறிவியல் நகரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில், டெலஸ்கோப் உருவாக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட டெலெஸ்கோப் மூலம்,  உடுமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள், வானியல் அற்புதங்களை கண்டு மகிழ்ந்தனர். `சூரியகிரகணம் நிகழும்போது வெளியில் வரக்கூடாது. உணவு உண்ணக் கூடாது` என்றெல்லாம் பரப்பப்பட்ட கருத்துகள்  தவறானவை என்பதை, பிரச்சாரங்கள் மூலம் எடுத்துரைத்துள்ளோம்.

பொதுவாக, வான் இயற்பியல் குறித்த  விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் குறைவாகவே உள்ளது. பாடப் புத்தகங்களை மட்டுமே நம்பி, உயர் கல்வியை பலரும் திட்டமிடுகின்றனர்.

புனேவில் உள்ள `அயூகா’ நிறுவனம்,  மாணவர்களுக்காக ஏராளமான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. நைனிடால் எனும் அறிவியல் ஆராய்ச்சி மையமும் வான் இயற்பியல் ஆராய்ச்சிக்கு உதவுகிறது.  இந்த மையங்களில் மாணவர்கள் பங்கேற்க, பெற்றோர் உதவ வேண்டும்.

நீண்டகால போராட்டத்துக்குப் பின் தற்போதைய பிளஸ் 1 பாடப் புத்தகங்களில், ஆராய்ச்சி மையங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

சூரியனைக் காட்டிலும் பெரிய நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளவதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. `வானியல் ஒலிம்பியா’ என்ற  நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.  இதில், அறிவியல் தொடர்பான, நுட்பமான கேள்விகள் கேட்கப்படும். சில பள்ளிகள் மாணவர்களை தயார்படுத்தி, அந்தப் போட்டியில் பங்கேற்கச் செய்கின்றன. எனினும், தமிழகத்தில் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் 5 பேர், வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க, மாணவர்களைத் தயார்படுத்தி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x