Published : 25 Mar 2019 09:58 PM
Last Updated : 25 Mar 2019 09:58 PM
அரசியல் சாசன உரிமையான வாக்குரிமையை யாரும் தடை செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் முன்வைத்த வாதத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், தனது முந்தைய உத்தரவை ரத்து செய்தது.
அரசியல் சாசன உரிமையான வாக்குரிமையை தடை செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் முன்வைத்த வாதத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற மதுரைக் கிளை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது என அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்கள், தெருக்களில் வசிப்பவர்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் சட்டப் பிரிவுகள் ஏதும் இல்லை எனவும், வாக்களிப்பது அரசியல் சாசன உரிமை எனவும் அரசியல் சாசனத்திற்கு முரணான இந்த அறிவுறுத்தல்களை பிறப்பிப்பது சிக்கலானது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஆக்கிரமிப்புக்களில் வசிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது என்ற மதுரைக் கிளை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT