Published : 28 Mar 2019 09:04 PM
Last Updated : 28 Mar 2019 09:04 PM

விசாரணை நடத்தாமல் விளம்பரத்திற்காக கைது செய்வதா?- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

அறநிலையத்துறை முன்னாள் கமி‌ஷனர் வீரசண்முகமணிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் ஐம்பொன் சிலை சேதம் அடைந்ததையொட்டி புதிய சிலை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது. இப்படி பெறப்பட்ட 8.7 கிலோ தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஐ.ஜி.-யாக இருந்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அறநிலையத்துறை முன்னாள் ஆணையரான வீரசண்முகமணியை மார்ச் 15-ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று ஜாமின் கோரி வீரசண்முகமணி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஜாமினுக்கான விசாரணையில், வீரசண்முகமணி தரப்பில், 2017 ஆகஸ்டில் தாம் ஓய்வுப் பெற்றுவிட்டதாகவும், பணியிலிருந்த காலத்தில் 38 ஆயிரம் கோவில் தன் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், ஆணையர் என்ற முறையில் புதிய பஞ்சலோக சிலைக்கு ஒப்புதல் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தரப்பில், வீரசண்முகமணிக்கு தெரியாமல் தங்கமே இல்லாமல் ஐம்பொன் சிலையை செய்திருக்க முடியாது என்றும், 2 கோடியே 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் மாயமானது குறித்து உண்மையை கண்டறிய வேண்டும் என்பதால், விதிகளையும் பின்பற்றியே கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை நடத்தாமல் விளம்பரத்திற்காக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், சந்தேகத்திற்கிடமானவர்களை அழைத்து விசாரிப்பதற்கு பதிலாக, நேரடியாக கைது செய்து பத்திரிகை, ஊடகங்களில் வெளியிடுவதை பார்க்கும்போது, விளம்பரத்திற்காக செயல்படுவதுபோல் தோன்றுவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் இந்த வழக்கில் ஏற்கனவே கைதான கூடுதல் ஆணையருக்கு ஜாமீன் வழங்கபட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வீரசண்முகமணிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டுமென நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் வழக்கமான நடைமுறையை பின்பற்றி விசாரணை நடத்தவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அறிவுறுத்தல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x