Published : 13 Mar 2019 08:01 AM
Last Updated : 13 Mar 2019 08:01 AM

ஜி.கே.வாசனுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் பேச்சு; அமைச்சர்கள் நேரில் சந்திப்பு: அதிமுக - தமாகா இன்று கூட்டணி உடன்பாடு

அதிமுக - தமாகா இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸில் இருந்து விலகியமுன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், 2014-ல் தமாகாவைதொடங்கினார். 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் கடைசி நேரத்தில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தமாகா போட்டியிட்டது.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக திமுக கூட்டணியில் சேர முடியாதநிலை தமாகாவுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, அதிமுக கூட்டணியில் இணைய ஜி.கே.வாசன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பேச்சுநடத்தி வருகிறார்.

அதிமுக கூட்டணியில் 3 மக்களவைத் தொகுதிகளுடன் 1 மாநிலங்களவை இடம் வேண்டும் என வாசன் கேட்டு வந்தார். ஆனால், ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே தர முடியும். அதிலும் வாசன் போட்டியிட வேண்டும் என அதிமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 2 தொகுதிகளாவது வேண்டும் என வாசன் வலியுறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக மாவட்டத் தலைவர்களுடன் வாசன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகளுக்கும் குறைவாக ஏற்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். மக்களவைத் தேர்தலில் வாசன் போட்டியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தொகுதி பங்கீடுதொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி,எஸ்.பி.வேலுமணி, அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சந்தித்துப் பேசினர். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஸ் ஆகியோர் வாசனுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

நேற்று நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அதிமுக - தமாகா இடையே இன்று உடன்பாடு கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x