Published : 29 Mar 2019 12:49 PM
Last Updated : 29 Mar 2019 12:49 PM

பாஜக, அதிமுகவுக்கு வாக்களித்தால் நாடே சுடுகாடாகி விடும்: கனிமொழி எச்சரிக்கை

பாஜக, அதிமுகவுக்கு வாக்களித்தால் நாடே சுடுகாடாகிவிடும் என்று தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மாநிலங்களவை எம்.பி.யும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பாளராகக் கட்சி அறிவிப்பதற்கு முன்பே களப்பணியையும் தொடங்கினார்.

தற்போது தூத்துக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்காக வாடகைக்குத் தனி வீடு எடுத்துத் தங்கியுள்ள கனிமொழி, தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

தன்னுடைய ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்தும் 'பாசிச பாஜக ஒழிக' என்று முழக்கமிட்ட சோபியா சம்பவத்தையும் குறிப்பிட கனிமொழி தவறுவதில்லை.

இந்நிலையில் கோவில்பட்டியில் வியாழக்கிழமை இரவு பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ''பாஜக, அதிமுகவுக்கு வாக்களித்தால் நாடே சுடுகாடாகிவிடும். மதத்தின் பெயரைச் சொல்லி மக்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் அரசியலையே பாஜக செய்துவருகிறது.

நீட் தேர்வைக் கொண்டுவந்து நம்முடைய குழந்தைகள் மருத்துவராக முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அதிமுகவுக்குப் பின்னால் நின்று, 13 பேரைக் கொலை செய்த நிலையை உருவாக்கி இருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் இவர்களுக்கு வாக்களித்தால் நாடு சுடுகாடாகிவிடும் என்ற நிலை இங்கே இருக்கிறது'' என்றார் கனிமொழி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x