Published : 10 Mar 2019 12:12 PM
Last Updated : 10 Mar 2019 12:12 PM

21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டி இல்லை - ரஜினி திட்டவட்ட அறிவிப்பு

21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் என்னுடைய ஆதரவு இல்லை என்றும் ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

மேலும் என்னுடைய படங்களையும் இயக்கக் கொடியை எவரும் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாகவே சட்டப்பேரவையே என் இலக்கு என்று தெரிவித்திருந்த ரஜினிகாந்த், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தண்ணீர்ப் பிரச்சினையை எந்தக் கட்சி தீர்ப்பதாகச் சொல்கிறதோ அந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்த நிலையில், இன்று மாலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் சேர்ந்து நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, சென்னை விமானநிலையத்தில் ரஜினிகாந்தை சந்தித்து, நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அப்போது, தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் கட்சி என்று மாநிலக் கட்சியைச் சொல்கிறீர்களா, தேசியக் கட்சியைச் சொல்லுகிறீர்களா என்று கேட்டதற்கு, ‘ரெண்டும்தான். மத்திய, மாநிலக் கட்சிகளைத்தான் சொல்றேன்’ என்று தெரிவித்தார்.

மேலும், ’சட்டப்பேரவைத் தேதல்தான் இலக்கு என்றீர்கள். இப்போது 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில், 21 தொகுதிகளிலும் உங்கள் கட்சியில் வேட்பாளர்கள் நிறுத்துவீர்களா?’ என்று கேட்டனர்.

அதற்கு ரஜினி, ‘இல்லை’ என்று பதிலளித்துச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x