Published : 25 Sep 2014 09:30 AM
Last Updated : 25 Sep 2014 09:30 AM

விஜயவாடா அருகே காரில் சென்ற 3 பேர் சுட்டுக் கொலை: மர்ம ஆசாமிகளுக்கு வலை

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்த 3 பேரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேற்கு கோதாவரி மாவட்டம், கடிமி கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடர்கந்தம் மாரய்யா (36) பகிடி மாரய்யா (34), வேதாந்தி (43), ஆகியோர் காரில் விஜயவாடா சென்றனர். பின்னர் அங்கிருந்து ஏலூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, கொல்கொத்தா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உங்கடூரு மண்டலம், பெத்த அவுடுபல்லி என்கிற இடத்தில் பின்னால் வந்த மற்றொரு கார் மோதியது. இதனால் ஓட்டுநர் நாகேஸ்வர ராவ் (55) காரை நிறுத்தினார்.

அப்போது பின்னால் வந்த காரிலிருந்த மர்ம நபர்கள்,இவர்கள் மீது 8 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.இதில் சம்பவ இடத்திலேயே பகிடி மாரய்யா, ஓட்டுநர் நாகேஸ்வர ராவ் ஆகியோர் உயிரிழந்தனர். கந்தம் மாரய்யா, வேதாந்தி ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தைக் கண்ட பொது மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் விஜயவாடா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விஜயவாடா போலீஸ் கமிஷனர் வெங்கடேஸ்வர ராவ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தம் மாரய்யா உயிரிழந்தார். வேதாந்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. இதனால் மர்ம நபர்களை விஜயவாடா போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x