Last Updated : 01 Mar, 2019 09:43 AM

 

Published : 01 Mar 2019 09:43 AM
Last Updated : 01 Mar 2019 09:43 AM

மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்துக்காக ’அட்சய பாத்ரா’ அறக்கட்டளையோடு புதுச்சேரி அரசு கைகோர்க்கிறது: அரசின் சமையல் கூடம் ஒப்படைப்பு

புதுச்சேரி அரசு, மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்துக்காக ‘அட்சய பாத்ரா'அறக்கட்டளையோடு கைகோர்க்கிறது. இதற்காக அரசின் சமையல் கூடம் அந்த அறக்கட்டளை அமைப்பிடம் ஒப்படைக்கப் பட்டது. ரூ.13 கோடியில் சமையல் கூடம் நவீன மயமாகிறது. புதுச்சேரி அரசின் மதிய உணவுத் திட் டத்தை இந்த அறக்கட்டளையிடம் ஒப்படைப் பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை மிச்சமாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ‘அட்சய பாத்ரா' அறக்கட்டளை மூலம் காலை உணவு திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாநிலம் முழுமைக்கும் இத் திட்டம் விரிவாக்க, இத்தொண்டு நிறுவனத் திடமே தமிழகத்தின் மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஒப்படைக்கக் கோரி இருந்தார். அதே நேரத்தில், ஏற்கெனவே புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம், பெங்களூரைச் சேர்ந்த இந்த ‘அட்சய பாத்ரா' அறக் கட்டளையுடன் இணைந்து புதுச்சேரி பகுதி பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த அறக்கட் டளையானது மாணவர்களுக்கான மதிய உணவை 12 மாநிலங்களில் வழங்கி வருகிறது.

13-வதாக வரும் ஜூன் மாதம் (வரும் கல்வியாண்டில்) புதுச்சேரியில் இத்திட்டத்தை தொடங்க உள்ளது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடக்க மாக புதுச்சேரி பகுதியில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 300 பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளையினர் உணவு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக புதுச்சேரி - லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மைய சமையல் கூடம் ‘அட்சய பாத்ரா' அமைப்பிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மைய சமையல் கூடத்தில்தான் மாணவர்களுக்கான உணவு தயாரிக்கப்பட உள்ளது. லாஸ்பேட்டை மைய சமையல் கூடத்தை ரூ. 13 கோடியில் இவ்வமைப்பினர் நவீனப்படுத்தும் பணிகளை தொடங்கவிருக் கின்றனர். இதற்காக கட்டிடத்தில் ஏற்கெனவே இருந்த பழைய சமையல் சாதனங்களை அகற்றி விட்டனர். புதிய சாதனங்கள் புதுச் சேரி வந்ததும் அவற்றை பொருத்தும் பணிகள் தொடங்கி விடும் என்று குறிப்பிடுகின்றனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை தரப்பில் விசாரித்தபோது, "ஒப்பந்தத்தின்படி பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் சாம்பார் சாதமும், மீதமுள்ள 3 நாட்களுக்கு புளியோதரை, தக்காளி சாதம், வெஜிடபுள் புலவ் போன்ற கலவை சாதங்கள் தரப்படும். மதிய உணவில் உருளைக்கிழங்கு பொறியல், சுண்டல், இனிப்பு பொங்கல், தயிர், பாயசம் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளும் தரப்படும்'' என்று தெரிவிக்கின்றனர். ஒப்பந்தத்தின் மூலம் மதிய உணவு தயாரிப்பதற்கான எந்தவிதமான கொள்முதல் செலவும், உணவு விநியோகம் தொடர்பான செலவினங்களும் புதுச்சேரி அரசுக்கு இருக்காது.

மதிய உணவுத் திட்டத்துக்கு மத்திய அரசு அளிக்கும் மானியத்துடன் புதுச்சேரி அரசு அளிக்க வேண்டிய பங்கில் பாதியளவு மட்டுமே ‘அட்சய பாத்ரா' அறக்கட்டளைக்கு அளிக்கப்படும். இதனால் புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி சேமிப்பாகும். அதே நேரத்தில் ஏற்கெனவே மாணவர்களுக்கு மதிய உணவுடன் தரப்படும் முட்டையை தொடர்ந்து தருவோம்" என்றும் குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x