கேரளாவில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவருக்கும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: உதகை நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவருக்கும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: உதகை நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான சயான் மற்றும் மனோஜை போலீஸார் கேரளாவில் கைது செய்தனர். அவர்கள் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பி. வடமலை உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில், சயான் மற்றும் மனோஜ், கொலையில் முதல்வருக்கு தொடர்பு உள்ளது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

முதல்வர் மீது அவதூறு தெரிவித்துள்ளதால், இருவரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 18-ம் தேதி வந்த போது சயான் மற்றும் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இருவரின் ஜாமீனை ரத்து செய்த நீதிபதி பி.வடமலை, இருவரையும் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

இந்நிலையில், இருவரும் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், இருவரும் கடந்த மாதம் 25-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சயான் மற்றும் மனோஜ் இருவரும் சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடமாடி வந்ததை போலீஸார் கண்காணித்து வந்தனர். நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை சயான் மற்றும் மனோஜை கேரளாவில் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் நேற்று இரவு உதகை கொண்டு வந்தனர்.

இன்று (சனிக்கிழமை) காலை இருவரையும் போலீஸார் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பி.வடமலை இருவரையும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in