Published : 09 Sep 2014 10:38 AM
Last Updated : 09 Sep 2014 10:38 AM
கடலூர் மாவட்டம் தியாகவல்லி அருகே சித்திரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பிரபு(30), ராஜூ(27), மணிமாறன்(32), சுகன்ராஜ்(22) ஆகிய 4 பேர் கடந்த ஓராண்டுக்கு முன்பு மீன்பிடிக்க குவைத் நாட்டுக்கு சென்றனர். அங்கு மாத ஊதியத்தில் விசைப்படகுகளில் வேலை செய்து வந்த 4 பேருக்கும், கடந்த 6 மாதங்களாக வேலை கொடுக்காமல், ஊதியம் வழங்காமல் அடைத்து வைத்து படகு உரிமையாளர் கொடுமைப்படுத்தி வருவதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தங்களது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சித்திரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார் தூதரகம் மூலம் 4 மீனவர்களையும் மீட்க முயற்சி மேற்கொண்டனர். அதன்பிறகு இதுவரை மீனவர்கள் நாடு திரும்பவில்லை.
இந்நிலையில் சித்திரைப்பேட்டை மீனவ கிராம தலைவர் எஸ்.மச்சகேது தலைமையில் பிரபு மனைவி வினிதா, ராஜூ மனைவி சுகன்யா, மணிமாறன் மனைவி ஆதவி, சுகன்ராஜ் தாய் சூரியகாந்தி மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அதில், குவைத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்டுக்கொடுக்க வேண்டும் என தூதரக அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், தங்களிடம் மனு அளித்துள்ளோம். இதனால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் 4 பேரை உடனடியாக மீட்டுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட் டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT