Published : 28 Sep 2014 11:17 AM
Last Updated : 28 Sep 2014 11:17 AM
மத்திய அரசு ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் தொகையை அவரது சகோதரியிடம் வழங்க தமிழ்நாடு அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கே.ஜெயலட்சுமி என்பவர் சென்னை நுகர்வோர் தெற்கு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது: என் அக்கா ரங்கநாயகி, கிண்டியில் உள்ள மத்திய அரசின் கலால் துறையில் பணிபுரிந்து வந்தார். அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்திருந்தார்.
அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக அவரது சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.898 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பிரீமியம் செலுத்திவந்தார்.
பிறகு, உடல்நலக் குறைவு ஏற் பட்டு நீண்ட விடுப்பில் சென்றுவிட் டார். அதனால் சில அலுவலக பிரச் சினைகள் காரணமாக விடுப்பில் சென்ற காலத்துக்கு சம்பளம் வழங் கப்படவில்லை. உடல்நலம் பாதிக்கப் பட்டு 2008-ம் ஆண்டு இறந்தார்.
பின்னர் அவரது ஆயுள் காப்பீட்டுத் தொகை குறித்து தமிழ்நாடு அஞ்சல் துறையினரிடம் கேட்டோம். ‘முழு பணிக் காலத்துக்கும் பிரீமியம் செலுத்தாததால், காப்பீடு பாலிசி காலாவதி ஆகிவிட்டது.
இதனால், அவர் செலுத்திய தொகை ரூ.24,246-ஐ வழங்கமுடி யாது’ என்று தெரிவித்தனர். அத் தொகையை வழங்குமாறு அஞ்சல் துறைக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு ஜெயலட்சுமி கூறியிருந் தார்.
இந்த வழக்கை தெற்கு நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் டி.கிருஷ்ணராஜன், உறுப்பினர்கள் எல்.தீனதயாளன், கே.அமலா விசாரித்தனர். ‘‘மனுதாரரின் சகோதரி ரங்கநாயகி அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் செலுத்திய ரூ.24,246-ஐ 9 சதவீத வட்டியுடனும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தையும் தமிழ்நாடு அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் துறை ஒரு மாத காலத்துக்குள் வழங்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT