

நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில், கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோவில் முன் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2015-ம் ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 17 பேர் மீது நாமக்கல் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது.
நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்கள் மிரட்டலால், அரசுத்தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டதால் நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நியாயமாக நடக்காது எனவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் முறையாக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க நாமக்கல் சிபிசிஐடிக்கும், குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் உத்தரவிட்டார்.