Published : 25 Mar 2019 12:07 PM
Last Updated : 25 Mar 2019 12:07 PM

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: இரா.முத்தரசன்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கச்சத்தீவு, நெடுந்தீவுக்கிடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 7 ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், 30-க்கும் மேற்பட்ட வலைகளை அறுத்து எறிந்துள்ளனர்.

மேலும் இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்ததுடன் அந்தப்படகுகளில் இருந்த கோபிராஜ், செல்வம், முருகன், நாகராஜன், சூலியான்ஸ், ராஜ், இருளப்பன், பால்ராஜ், ராமநாதன், பூமிநாதன், பிரசிடன்  ஆகிய 11 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்திட மத்திய அரசும், தமிழக அரசும் எத்தகைய நிரந்தர நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இலங்கை கடற்படையின் இத்தகைய அராஜக நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 மீனவர்களையும் உடனே விடுவிக்கவும், இரண்டு விசைப்படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x