Last Updated : 28 Mar, 2019 09:42 AM

 

Published : 28 Mar 2019 09:42 AM
Last Updated : 28 Mar 2019 09:42 AM

நடுத்தர மக்களை கவர்ந்த மக்கள் நீதி மய்யம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆடம்பர பேனர்கள், ஆட்டம், பாட்டம், இரைச்சல், சண்டை சச்சரவுகள், மது வாடை. பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்களில் தென்படும் காட்சிகள் இவை. ஆனால், இவையேதும் இன்றி கட்டுக்கோப்பாக நடந்து முடிந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை பொதுக்கூட்டம்.

அண்மையில் கோவை கொடிசியா மைதானத்தில் நடை பெற்ற கூட்டத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வரவழைக்கப் பட்டிருந்தனர். அவர்களையும், பொதுமக்களையும் ஒழுங்கு படுத்த வெவ்வேறு நிறங்களில் அனுமதிச்சீட்டுகள் வழங்கப் பட்டிருந்தன.முக்கிய விருந்தினர் கள், கட்சியின் நிர்வாகிகள், பத்திரிகையாளர்களுக்கு கருப்பு நிற அனுமதிசீட்டு, கட்சியின் பொறுப்பாளர்களுக்கு சிகப்பு நிற அனுமதிச் சீட்டு என பிரித்து வழங்கப்பட்டு, அதற்கேற்ற வாறு இருக்கைகள் ஒதுக்கப் பட்டிருந்தன. பார்வை யாளர்களுக்கு மத்தியில் கமல்ஹாசன் நடந்து சென்று பேச சுமார் 50 மீட்டருக்கு நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கும் முன், மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து நடைபெற்ற நடன நிகழ்ச்சி பார்வையாளர் களை கவர்ந்தது. வழக்கமான அரசியல் கட்சி கூட்டம்போல் இல்லாமல் கலைவிழாவுக்கான மேடை போன்று விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது.

கட்சி சாராத வாக்காளர்கள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வருகின்றனர். தேர்தலின்போது அவர்களை எப்படியாவது கவர வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்தும். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் நடத்திய கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர் கள், ரசிகர்களை தவிர்த்து நடுத்தர மக்கள் கூட்டத்தைக் காண முடிந்தது. அவர்களில் பலரிடம் பேசியதில் இருந்து, அவர்கள் இதுவரை எந்த கட்சியிலும் இல்லை என்பது தெரிந்தது.

வேலை செய்யாவிட்டால் ராஜினாமா

கூட்டம் எப்படி இருந்தது என அவர்களிடம் கேட்டதற்கு, “மற்ற கட்சிகள் போல ஆடம்பர பேனர்கள் வழியெங்கும் வைக்கப்படவில்லை. இதனால், மக்களுக்கு ஏற்படும் இடையூறு தவிர்க்கப்பட்டது. விழா மேடை அருகில் மட்டும் பேனர்கள் இருந்தது வரவேற்கத்தக்கது. வழக்கமான அரசியல் மேடை போல் இல்லாமல் வித்தியாசமாக மேடை, ஒலி, ஒளி அமைப்புகள் இருந்தன. கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் எதிர்கொண்ட முக்கிய பிரச்சினைகள் குறித்த கமல் ஹாசனின் விளக்கம் கவனத்தை ஈர்த்தது. எதிர்கட்சிகள் யாரையும் கமல்ஹாசன் விட்டுவைக்க வில்லை. ஆண்ட கட்சி, ஆளும் கட்சியினரின் குறைபாடுகளை விமர்சித்து பேசினார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று, தங்கள் கடமையைச் சரியாக செய்ய தவறினால், அது குறித்து புகார்கள் தெரிவிக்கப் பட்டு, அது நிரூபணமானால் அவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற அறிவிப்பு வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாதது.

குறைகள் என்ன?

தொழில் நகரமான கோவை யில், ஜிஎஸ்டி-ன் பாதிப்புகள் குறித்து கமல்ஹாசன் எதுவும் பேசவில்லை. மற்ற கட்சிகள் போலவே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் குறித்தும் புகழாரங்கள் சூட்டப்பட்டன. கோவை சரளா கமல்ஹாசன் குறித்து நீண்ட கவிதையை வாசித்தார். இது தேவைதானா. இனிவரும் நாட்களிலும் அது தொடர்ந்தால் மற்றவர்களுக்கும், இவர்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். பார்வையாளர்களுடன் நெருக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் நீண்ட நடைமேடை அமைத்திருந்தனர். அதை கமல் ஹாசன் முழுமையாக பயன்படுத்த வில்லை. விழா மேடைக்கு வரும்போது மட்டும் நடை மேடையை பயன்படுத்தினார். அதைத் தொடர்ந்து, ஒரே இடத்தில் நின்றுகொண்டு பேசி, முடித்துவிட்டார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x