Last Updated : 08 Mar, 2019 06:49 PM

 

Published : 08 Mar 2019 06:49 PM
Last Updated : 08 Mar 2019 06:49 PM

பெண்ணுக்கு பெருமை சேர்த்த சென்னை பெருநகர போலீஸ்

உலக மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பாலின சமத்துவம் எட்டப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டுக்கான மையக்கருத்தாக #BalanceForBetter என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளமான எதிர்காலத்துக்கு பாலின சமத்துவம் என்பதே இதன் பொருள்.

இந்நிலையில், உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னை பெருநகர போலீஸ் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளது. #BalanceForBetter என்ற ஹேஷ்டேகின் கீழ் அது பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோ 3.12 விநாடிகள் ஓடுகிறது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் உள்ளிட்ட உயரதிகாரிகளும் அதில் இடம்பெற்றுள்ளனர்.

காவல்துறையில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் மன உறுதியையும், துணிச்சலையும், தீர்க்கமான நிலையையும் கொண்டாடுவதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் தொடங்கி கான்ஸ்டபிள்வரை 500 பெண் காவலர்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். சர்வதேச மகளிர் தினத்தின் மையக்கருத்தான பேலன்ஸ் ஃபார் பெட்டர் என்ற வாசகத்தை எழுத்துகோர்வையாக காவலர்கள் அணிவகுத்து தூக்கிப் பிடிக்க ஹெலிகாப்டர் ஷாட்டில் அது அழகாக படமாகியுள்ளது.

பெண் காவலர்கள் கையில் காவல் ஆணையர் விஸ்வநாத், மகளிர் தின மையக்கருத்து அடங்கிய பட்டையை அணிவித்தார். தராசின் சமநிலையை உணர்த்துவதுபோல் காவல் ஆணையருடன் பெண் உயரதிகாரிகளும் இணைந்து சமநிலையை ஊக்குவிப்பதன் அடையாளமாக தங்கள் கைகளில் சமிக்ஞை காட்டுகின்றனர்.

அந்த வீடியோ, அவள் சுதந்திரமாக அச்சமின்றி பறக்கட்டும். நாங்கள் பெண்களை மதிக்கிறோம் பாதுகாக்கிறோம் என்ற வாசகத்தோடு முடிவடைகிறது.

இந்த வீடியோவை சென்னை பெருநகர போலீஸின் அங்கமாக இருக்கும் பெண் காவலர்களுக்கு சமர்ப்பிப்பதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் கூறியுள்ளார்.

சென்னை காவல் ஆணையர்களில் மனிதாபிமானமிக்க காவல் ஆணையராக, பொதுமக்கள், போலீஸார் யார் நல்ல செயல்களை செய்தாலும் அழைத்து பாராட்டும் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் விளங்கி வருகிறார். கடந்த ஆண்டு வழிப்பறி சம்பவத்தில் வழிப்பறி நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்குள்ளான லாவண்யா என்கிற மென்பொறியாளர் உயிருக்கு போராடி மீண்டார். காவல் ஆணையராக தனது பணியைமட்டும் செய்யாமல் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று அப்பெண்ணுக்கு மனதைரியத்தையும் ஆறுதலையும் அளித்தார் காவல் ஆணையர். இந்நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெண் காவலர்களை போற்றும் விதத்தில் காணொளி வெளியிட்ட சென்னை காவல்துறையை பெண்கள் பெருமையுடன் பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x