Last Updated : 27 Mar, 2019 09:05 AM

 

Published : 27 Mar 2019 09:05 AM
Last Updated : 27 Mar 2019 09:05 AM

வேறு தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் சென்றுவிட்ட நிலையிலும் கூட்டணிக் கட்சிகளின் வரவேற்பால் உற்சாகத்தில் திருநாவுக்கரசர்

வேட்புமனு தாக்கல் நிறைவு நாளில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளில் சிலர் வேறு தொகுதிகளுக்குச் சென்றுவிட்ட நிலையிலும், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அளித்த வரவேற்பு, அவர்களின் பலம் திருநாவுக்கரசரை உற்சாக மடைய வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி தொகுதிக்கான போட்டியிலிருந்து மதிமுக விலகிய நிலையில், இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவனும் இத்தொகுதியைக் கேட்பதாக தகவல் பரவ, காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பான சூழல் நிலவியது. இறுதியில் முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்தச் சூழலில் திருநாவுக்கரச ரின் ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் உட்பட பலர் கலந்துகொள்ளவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, அருணாச்சல மன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளை சு.திருநாவுக்கரசர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அங்கும், முக்கிய நிர்வாகிகளில் சிலர் வரவில்லை.

அதே நாளில் திருநாவுக்கரசர், கலைஞர் அறிவாலயத்துக்குச் சென்றபோது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக, மதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் அவரை வரவேற்க அதிகளவில் திரண்டிருந்தனர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களைவிட, திமுகவினர் அளித்த வரவேற்பு திருநாவுக்கரசருக்கு ஆச்சரியத் தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. கூட்டணியின் இந்த பலம், நிச்சயம் தனக்கு வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையில் திருநாவுக்கரசர் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி கள் கூறியதாவது: திருச்சி மாவட்ட காங்கிரஸில் ஈவிகேஸ் இளங்கோவன், ப.சிதம்பரம், சு.திருநாவுக்கரசருக்கு கணிசமான ஆதரவாளர்கள் உண்டு. இதுதவிர முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸூக்கு தனி செல்வாக்கும் உண்டு. மற்ற நாட்களில் தனித்தனியாக இருக்கும் இவர்கள், தேர்தல் சமயத்திலாவது ஒன்றுகூடி செயல்படலாம். ஆனால், அந்த நிலை வருமா எனத் தெரியவில்லை.

திருநாவுக்கரசர் வேட்புமனு தாக்கல் செய்த நாளில், இங்குள்ள நிர்வாகிகளில் சிலர் இளங்கோவன் போட்டியிடும் தேனி தொகுதிக்கும், கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதிக்கும், டாக்டர் செல்லக்குமார் போட்டியிடும் கிருஷ்ணகிரி தொகுதிக்கும் சென்றுவிட்டனர். ஆனால், அன்று காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், திமுக மற்றும் கூட்டணியிலுள்ள மற்ற கட்சியினர் அளித்த வரவேற்பு திருநாவுக்கரசருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களை ஒருங்கிணைத்துச் சென்று பிரச்சாரம் செய்வதன் மூலம், திருநாவுக்கரசர் இத்தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றனர்.

தேர்தல் பிரச்சார வியூகங்கள் தயார்

திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் கூறியபோது, "திருநாவுக் கரசரை வேட்பாளராக அறிவித்ததில் யாருக்கும் அதிருப்தியில்லை. சில நிர்வாகிகள், தங்களது தலைவர்கள் போட்டியிடும் தொகுதிக்குச் சென்றுள்ளனர். ஜோசப் லூயிஸ் சென்னையில் உள்ளார். அவர் உட்பட முக்கிய நிர்வாகிகளிடம் திருநாவுக்கரசர் பேசிவிட்டார். அனைவரும் விரைவில் திருச்சி வந்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவர். திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நாளை (மார்ச் 28) கலைஞர் அறிவாலயத்தில் கே.என்.நேரு தலைமையில் நடைபெற உள்ளது. அதற்குப்பின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும். தேமுதிக, அமமுக வேட்பாளர்களை வீழ்த்தும் வகையிலான தேர்தல் பிரச்சார வியூகங்கள் தயாராக உள்ளன" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x