

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக முதலவர் பழனிசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து, நேரில் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட சம்மனையும் ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 18-ம் தேதி தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோ குறித்தும், கோடநாடு கொலை, கொள்ளை குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி முதல்வர் பழனிசாமி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதாதேவி மார்ச் 21 அன்று ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.சம்மனை எதிர்த்தும், வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக அளிக்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும். நேரில் ஆஜராகும் உத்தரவுக்கு விலக்களித்து உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை விசாரணை நடத்த தடை விதிக்கவேண்டும்” என்று வாதத்தில் கேட்டுக்கொண்டார்.
பின்னர் இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்குக்கு தடை விதிப்பதாகவும், மார்ச் 21-ம் தேதி நேரில் ஆஜராகும் சம்மனை ரத்து செய்வதாகவும், அன்றைய தினம் ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்களிப்பதாகவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தமிழக அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.