Published : 08 Mar 2019 06:50 PM
Last Updated : 08 Mar 2019 06:50 PM
செய்தியாளர்களை அவமதிக்கும்வகையில் பிரேமலதா விஜயகாந்த்குறிப்பிட்டுள்ளவை அரசியல் பண்பற்ற செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைப்பதற்காக நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் , திமுக பொருளாளர் துரைமுருகன் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் அளித்துள்ள பேட்டி அரசியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லாதது வருத்தமளிக்கிறது.
கட்சி மாறுபாடுகள் இருந்தாலும் தலைவர்கள் அரசியல் நாகரீகத்துடன் கருத்துக்கள் தெரிவிப்பதையே தமிழக மக்கள் விரும்புவார்கள். பத்திரிக்கையாளர்கள் அரசியல் தலைவர்களின் செய்திகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான பணியினை ஆற்றி வருபவர்கள்.
ஆகவே தான், பத்திரிகையாளர்களை சந்திப்பதை அரசியல் தலைவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அத்தகைய ஊடகத்துறை நண்பர்களை நீ, வா, போ என ஒருமையில் பேசுவதும், வீட்டு வாசலில் காத்துக் கிடப்பவர்கள் என குறிப்பிடுவதும் அரசியல் பண்பற்ற போக்கு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.”
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT