பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; எஸ்பி, ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; எஸ்பி, ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது
Updated on
2 min read

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட எஸ்.பி. பாண்டியராஜன் மீதும், தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல் துறையினர் 4 பேரைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும், கல்லூரியின் பெயரையும் வெளியிட்டார்.

அதேபோன்று, இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்றி உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை குறிப்பிடப்பட்டது. இது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 ஏ பிரிவின் கீழ் குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என சூரியபிரகாசம் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீதும், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி டிஜிபியிடம் கடந்த 15-ம் தேதி புகார் அளித்ததாகவும், இதுவரை வழக்குப்பதிவு இல்லை என்றும், இருவரும் உயர் அதிகாரிகள் என்பதாலும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யமாட்டார்கள் என்பதாலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனுவை ஏற்ற நீதிபதி இளந்திரையன் திங்கட்கிழமை(இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எ.நடராஜன் ஆஜராகி தனது வாதத்தை வைத்தார்.

அவரது வாதத்தில், ''இந்த வழக்கில் மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்மீது கோவை காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை இன்னும் முடியவில்லை.

இந்த வழக்கில் உடனடியாக புகார் மனு மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. சம்பந்தப்பட்ட மனுதாரர் அவர் எல்லையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

ஆனால் டிஜிபிக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதுவுமல்லாமல் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவேண்டும் என கோருகிறார். இதை உயர் நீதிமன்றம் ஏற்கக்கூடாது'' என வாதிட்டார்.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன் ''மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அங்கு உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் உடனடியாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகி வழக்குப் பதிவு செய்யக் கோரலாம். அங்கும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தை நாடலாம். ஆகவே உங்கள் கோரிக்கைகளை உள்ளூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்'' என உத்தரவிட்டார்.

பின்னர் வழக்கை முடித்து வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in