Published : 30 Mar 2019 11:40 AM
Last Updated : 30 Mar 2019 11:40 AM

எனக்கே பூச்சாண்டி காட்டுகிறீர்களா?- வருமான வரித்துறை சோதனை குறித்து துரைமுருகன் காட்டம்

வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்து துரைமுருகன் காட்டமாகப் பேட்டி அளித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய சோதனை நடத்தினர்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேலூர், காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல காட்பாடியில் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. நேற்று இரவு தொடங்கிய சோதனை காலை வரை நீடித்தது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்,  ''நாங்கள் தவறாக வந்துவிட்டோம் என்று கூறிவிட்டு, அதிகாரிகள் சென்றுவிட்டனர். சோதனை நடத்த வேண்டிய காலம் இதுவல்ல. தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளோம்.

நாங்கள் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்தவில்லை. சாதாரணமாக ஒரு கல்லூரியை நடத்தி வருகிறோம். இந்த நேரத்தில் எங்களின் வீட்டில் நுழைய வேண்டிய அவசியம் என்ன? போன மாதம் வந்திருக்கலாமே!

கதிர் ஆனந்த் தேர்தலில் நிற்கிறார்; அவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனவே அதைத் திசை திருப்பித் தடுக்க வேண்டும் என்றும் மன உளைச்சலைத் தந்து பயமுறுத்திப் பணியவைத்து விடலாம் என்றும் நினைக்கின்றனர்.

களத்திலே எங்களை எதிர்க்கத் திராணியற்றுப் போயிருக்கிற மத்திய, மாநில அரசுகளோடு உறவு கொண்டுள்ள சில கடைந்தெடுத்த கழிசடை அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சி இது. நேருக்கு நேர் மோத முடியாமல், அதிகாரிகளை விட்டு முதுகில் குத்தப் பார்க்கின்றனர். ஆனால் மக்களுக்கு இப்போது யார், என்ன துரோகம் செய்தார்கள் என்று தெரியும்.

இப்படி மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது, பூச்சாண்டி காட்டுவது இதெற்கெல்லாம் திமுகவின் அடிமட்டத் தொண்டன் கூட பயப்படமாட்டான். எனக்கே பூச்சாண்டி காட்டுகிறீர்களா? நாங்கள் மிசாவைப் பார்த்தவர்கள்; அடக்குமுறையை எதிர்கொண்டவர்கள்.

எங்களை மிரட்ட நினைப்பவர்கள் நேரடியாகச் செய்யாமல், ஓடிப்போய் மத்திய அரசின் காலில் விழுந்து 'நீங்கள் இன்கம்டாக்ஸ் பண்ணுங்கள், நான் ஜெயித்துவிடுவேன்' என்கிற வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயந்துவிடமாட்டோம்'' என்றார் துரைமுருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x