

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீதும், தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும், கல்லூரியின் பெயரையும் வெளியிட்டுள்ளார்.
அதேபோன்று, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியில் பெயரை குறிப்பிட்டுள்ளது, இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 ஏ பிரிவின் கீழ் குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என சூரியபிரகாசம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீதும், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி டிஜிபியிடம் கடந்த 15-ம் தேதி புகார் அளித்ததாகவும், இருவரும் உயர் அதிகாரிகள் என்பதாலும், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள் என்பதாலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.