Last Updated : 10 Mar, 2019 10:23 AM

 

Published : 10 Mar 2019 10:23 AM
Last Updated : 10 Mar 2019 10:23 AM

பேட்டரி டார்ச்’ சின்னம்; புதிய ஒளி பாய்ச்சுவோம்! - கமல் ட்விட்டரில் உற்சாகம்

கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு, ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ‘பொருத்தமான சின்னம். புதிய ஒளி பாய்ச்சுவோம்’ என கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து களம் காண்பது என முடிவெடுத்துள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், போட்டியிடுவதற்கு கடந்த வாரங்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ராமநாதபுரம், தென்சென்னை, திருப்பூர் முதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பலரும் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர்.

கமல்ஹாசன், தன் சொந்த ஊரான ராமநாதபுரம் தொகுதியில் களம் காண்பார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இந்த நிலையில், மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம், மக்கள் நீதி மய்யம் சார்பில் கொண்டாடப்பட்டது. அப்போது நடிகை கோவை சரளா, மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கியிருப்பதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ‘பேட்டரி டார்ச்’ சின்னம், மிகப் பொருத்தமானது. தமிழகத்தில் புதிய சகாப்தத்திற்கும் இந்திய அரசியலுக்கும் புதிய ஒளி பாய்ச்சுவோம். பொருத்தமான சின்னம்.

இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x