Published : 17 Mar 2019 10:03 AM
Last Updated : 17 Mar 2019 10:03 AM
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது, கிருஷ்ணகிரி, திருச்சி, விருதுநகர் தொகுதிகள் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 10-ம் தேதி 4 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்ட தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணியை இறுதி செய்தது. அதன்பின், தமாகாவும் கூட்டணியில் இணைந்தது.
அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த கூட்டம் கடந்த 13-ம் தேதி நடந்தது. ஒரே தொகுதிக்கு பல கட்சிகள் விருப்பம் தெரிவித்ததால், இக்கூட்டத்தில் தொகுதிகள் இறுதி செய்யப் படவில்லை. தொடர்ந்து, ராமநாதபுரம் தொகுதிக்காக பாஜகவுடனும், கிருஷ்ண கிரி தொகுதிக்காக பாமக, தேமுதிகவுடனும் அதிமுக பேசி வந்தது.
வரும் 19-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால், அதற்கு முன்பு தொகு திகளை அறிவித்து, வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. 17-ம் தேதிக்குள் (இன்று) இப்பணிகளை முடிக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் பழனி சாமி நேற்று காலை 11.15 மணி அளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு சென் றார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜு, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, டெல்லிக்கான சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். அவர்களை விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் வரவேற்றார். தொடர்ந்து, விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடன் முதல்வர் 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
நலம் விசாரிப்பதற்கான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், தொகுதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் விருப்ப பட்டியலில் உள்ள கிருஷ்ணகிரி தொகுதியை தேமுதிக கேட்டு வருகிறது.
அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரது உறவினரும், தேமுதிக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளருமான அன்பழகனை அந்த தொகுதியில் நிறுத்த விரும்புவதாக முதல்வரிடம் தேமுதிக தரப்பில் கூறப் பட்டுள்ளது. ஆனால், இதுபற்றி ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, திமுக கூட்டணியில் காங்கி ரஸுக்கு ஒதுக்கப்பட்ட விருதுநகர், திருச்சி தொகுதிகள் தற்போது தேமுதிக விருப்ப பட்டியலில் உள்ளன. இந்த தொகுதிகளை தங்களுக்கு அளித்தால் வெற்றி பெறலாம் என அதிமுக கருதுகிறது. இதுதொடர்பாக வும் விஜயகாந்த் உள்ளிட்டோருடன் முதல்வர் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், விஜயகாந்தை சந்தித்து விட்டு, அதிமுக தலைமை அலுவலகம் வந்த முதல்வர் பழனிசாமி, கட்சி நிர்வாகி களுடன், தேர்தல் அறிக்கை, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல் தொடர் பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
தொகுதி பட்டியல் இறுதிசெய்யப்பட்டு இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. விரைவில் தென் மாவட்டங்களில் ஒன்றில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தவும் அதிமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்தும் முதல்வர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT