Published : 28 Mar 2019 04:29 PM
Last Updated : 28 Mar 2019 04:29 PM

தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல, தமிழர் உரிமைகளை விற்ற பரம்பரை: கருணாஸ் காட்டம்

இந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழிசையின் கற்றப்பரம் பரைக்கு தமிழர்களின் கற்பிதம் என்னவென்று தெரியும், தெரியவைப்பார்கள் யார் கற்றப்பரம்பரை, யார் குற்றப்பரம்பரை என்று என கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று வேட்புமனு பரிசீலனை பிரச்சினையில் நான் குற்றப்பரம்பரை அல்ல கற்றப்பரம்பரை என சர்ச்சைக்குரிய ட்வீட்டை தமிழிசை பதிவு செய்து பின் எதிர்ப்பு காரணமாக நீக்கினார்.

ஒரு நாள் கழித்து நான் திமுகவைத்தான் குற்றப்பரம்பரை என்றுச்சொன்னேன் என மீண்டும் பதிவிட்டுள்ளார். தமிழிசையின் சர்ச்சைப்பதிவை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து இன்று கருணாஸ் வெளியிட்ட அறிக்கை:

“தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் கனிமொழியின் வேட்பு மனுவில் படிவம்-2 சரியாக நிரப்பப்படாததால் அதுவும் ஒத்துவைக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் வழக்கம் போல பாஜக எஜமான விசுவாசத் திமிரில் எதை பேசவேண்டும் எதை பேசக் கூடாது என்ற அடிப்படை அறிவை மறந்து தனது டிவிட்டரில் ” நாங்கள் கற்றப்பரம்பரை; குற்றப்பரம்பரை அல்ல” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் நோக்கம் என்ன?

குற்றம்பரம்பரை என்ற சொற்றொடரின் வரலாறு தெரியுமா தமிழிசைக்கு. தமிழகத்தில் சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள்ஆடு மாடுகள் வளர்த்தும் வேளாண்மை செய்தும் தங்களுக்கென தனிக் கலாச்சார அடையாளத் துடன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்த மதுரை மாவட்ட பெருங்காம நல்லூர் மக்கள் மீது ஆங்கிலேயே அரசு 3.4.1920-ல் துப்பாக்கிச்ச்சுடு நடத்தியது. அதில் வீரத்தமிழ் மறத்தி மாயக்காள் உள்ளிட்ட 16 பேர் மரணமடைந்தனர்.

1927-ம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்துபோது முத்துராமலிங்கத் தேவர்  இந்தச் சட்டத்தை நீக்குவதற்காக பெரும் போராட்டம் நடத்தினார்.

1929-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினரை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது ஆங்கிலேய அரசு. அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார், முத்துராமலிங்கதேவர்.

இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த இக்கொடுமைகளை எதிர்த்து, 1930-களில் இருந்தே பல விவாதங்கள் நடந்தன. 1936-ல் ஜவஹர்லால் நேரு, ‘சட்டப் புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றார். இதே போல, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுப்பராவ், கி.சி. தக்கா, ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தினர்.

அதன் விளைவால், 1947-இல் காவல்துறை அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே  அது காலாவதியானது.

இந்த வரலாற்றை தமிழிசை மறந்தது ஏன்? குற்றம்பரை சட்டத்தை எதிர்த்து அதற்காகவே போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரமறவர்களின் மண்ணில் நின்று ஓட்டுக் கேட்கும் தமிழிசை, அவர்களின் தியாகத்தை - வரலாற்றை கொச்சைப்படுத்துவதின் நோக்கம் என்ன?

குற்றப்பரம்பரை என்பது அன்றைய ஆங்கிலேயே அரசு குறிப்பிட்ட மக்களை முடக்குவதற்காக பயன்படுத்திய ஒடுக்குமுறை சொல்லாடலே. அதை தன்னுடைய தொகுதியில் தேர்தலுக்காக, குறிப்பிட்ட சாதியினரை அவமானப்படுத்தும் விதமாக அச் சொல்லாடலை பயன்படுத்தியது ஏன்?

வேட்பு மனுவையே சரிவர நிரப்ப தெரியாத நீங்கள் கற்றப்பரம்பரையா? ஓட்டு வாங்குவ தற்காகவே இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஊரெல்லாம் சுவரொட்டி வழியாக இரு   சமூகத்திற்குள்  கலவரம் தூண்ட முயற்சி செய்கிறீர்களா?

நாங்கள் குற்றபரம்பரை இல்லை, இந்தியாவை கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து நின்று போரிட்டு வென்ற குற்றம் சாட்டப்பட்ட பரம்பரை. ஒன்றைமட்டும் தமிழிசை புரிந்து கொள்ளவேண்டும். நாங்கள் குற்றப்பரம்பரை என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் நீங்கள் தமிழர் உரிமைகளை மட்டுமின்றி; ஒட்டு மொத்த இந்தியாவையே அந்நியர்களுக்கு விற்றபரம்பரை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

இந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழிசையின் கற்றப்பரம் பரைக்கு தமிழர்களின் கற்பிதம் என்னவென்று தெரியும், தெரியவைப்பார்கள் யார் கற்றப்பரம்பரை, யார் குற்றப்பரம்பரை என்று”

இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x