Published : 16 Mar 2019 10:41 AM
Last Updated : 16 Mar 2019 10:41 AM

கருஞ்சிறுத்தையும் புகைப்படக் கலைஞரும்!

சினிமாக்களிலும், நிஜ வாழ்க்கையிலும் வீரம் மிகுந்து இருப்பவர்களின் வீரத்தைப் பறை சாற்றும் வகையில், அவர்களை சிங்கம், புலி, கருஞ்சிறுத்தைன்றெல்லாம் அடைமொழியுடன் மக்கள் அழைப்பது வழக்கம். ஆனால், `நிறமி’ குறைபாடு காரணமாக கருப்பாக காட்சியளிக்கும் கருஞ்சிறுத்தை தனி இனம் இல்லை’ என்கின்றனர் வன உயிரன ஆர்வலர்கள்.

வன உயிரின புகைப்படக் கலைஞர்களுக்கு,  கருஞ்சிறுத்தையை படம் பிடிப்பது வாழ்நாள்  லட்சியமாக இருக்கும். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்  தாஸ் சந்திரசேகர், நீலகிரி வனக் கோட்டத்தில் கோத்தகிரி அருகேயுள்ள தேயிலைத் தோட்டம் பகுதியில் ஒரு கருஞ்சிறுத்தை, மற்றோரு சிறுத்தையுடன் இருப்பதைப் படம் எடுத்துள்ளார்.

மூன்றாண்டு போராட்டத்துக்குப் பின்னர் கருஞ்சிறுத்தையை தனது கேமராவில் கைது செய்துள்ளார்  தாஸ் சந்திரசேகர். “புகைப்படம் எடுத்த அந்த தருணத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது” என்கிறார் இவர்.

தொடர்ந்து அவரிடம் பேசினோம். “நான் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட சிறுத்தைகளைப் புகைப்படம் எடுத்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுக்க முயற்சித்து வந்தேன். கோத்தகிரி பகுதியில் பல கருஞ்சிறுத்தைகள் உள்ளன. எனினும், அவற்றைப் புகைப்படம் எடுப்பது சுலபமல்ல. மிகவும் மெனக்கெட வேண்டும். இறுதியாக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. புகைப்படத்தில் உள்ளது பெண் கருஞ்சிறுத்தை. தனது இணையுடன் வசித்து வருகிறது. இரு சிறுத்தைகளையும் புகைப்படம் எடுத்ததும், அவற்றைத் தொந்தரவு செய்யாமல், அப்பகுதியிலிருந்து நான் வெளியே வந்து  விட்டேன்’ என்கிறார் சிலிர்ப்புடன்.

கோத்தகிரி மற்றும் சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் கருஞ்சிறுத்தைகள் வசிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உதகையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் என்.மோகன்ராஜ் கூறும்போது, “சிறுத்தைகள் நிறமிக் குறைபாடு உள்ள குட்டிகள் மற்றும் வழக்கமான குட்டிகளை ஈன்றெடுக்கும். அதன் கருப்பு நிறம், நிறமிக் குறைபாட்டால் உருவாகிறது. இவை தனி இனம் இல்லை. குகைகளில் வசிப்பதால் இவற்றை எளிதாக காண முடியாது. பகல் நேரங்களில் இரை தேடி வரும்போது, கருப்பு நிறம் காரணமாக மற்றவர்களுக்குத் தென்படுகின்றன” என்றார்.

சுருக்கில் சிக்கிக் கொள்ளும் சிறுத்தைகள்...

கருஞ்சிறுத்தையைக் காணும் ஆவலில்  சிலர் வனப் பகுதிகளில் நுழைந்து விடுகின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, வனத் துறையினர் தொடர்ந்து  கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர், வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு வைப்பதால், சிறு உயிரினங்களான பன்றி, முயல் ஆகியவற்றுடன், சிறுத்தைகளும் சிக்கிக்கொள்கின்றன. இதனால், வனப் பகுதிகளில் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபடும் வனத்துறையினர், வைக்கப் பட்டுள்ள சுருக்குகளை அகற்றி, விலங்குகளின்  பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x