Published : 05 Mar 2019 09:57 PM
Last Updated : 05 Mar 2019 09:57 PM
சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையார் பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் (Drone) பறந்ததாக புகாரளிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு 9:15 மணி அளவில் ஐஎன்எஸ் அடையார் கடற்படை பகுதியில் ஆளில்லாத இலகு ரக குட்டி விமானம் (Drone) சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் பறந்து பின் மறைந்துள்ளது. இந்த ஆளில்லா விமானத்தை கடற்படையைச் சேர்ந்த மோகித் என்ற அதிகாரி பார்த்து, கடற்படை ஆய்வாளர் அனில்குமார் என்பவரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து கடற்படை ஆய்வாளர் அனில்குமார் புனித ஜார்ஜ் கோட்டை போலீசில் ஆளில்லா குட்டி விமானம் பறந்தது குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட ட்ரோன் எனப்படும் சிறிய விமானத்தை கொண்டு வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த விமோயென் கை என்ற நபரிடம் விசாரணை நடந்தது. அவரிடம் எழுதி வாங்கி கொண்டு தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாதாரணமாக ட்ரோன் வகை சிறிய விமானங்கள் பொதுவெளியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.என்.எஸ் கடற்படை தளத்தின்மீது ட்ரோன் வகை சிறிய விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT