Published : 08 Feb 2019 11:39 AM
Last Updated : 08 Feb 2019 11:39 AM

தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.5,454 கோடியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை: ஓபிஎஸ்

மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வருவாயில் 2017-18 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 5,454 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

"வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை சுகாதாரம், பாலின சமத்துவம் போன்ற குறியீடுகளில் 100 பிற்படுத்தப்பட்ட வட்டாரங்களில் சிறப்பு கவனம் செலுத்தி சமச்சீரான வளர்ச்சி ஏற்படுவதற்காக மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிதியத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்திற்கு 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் மாநிலங்களுக்கு இடையேயான மத்திய அரசின் நிதிப்பகிர்வில், தமிழ்நாட்டுக்கான பங்கு குறைந்துள்ள போதும் உதய் திட்டத்தையும், ஊதிய உயர்வையும் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் 9.07% ஆக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் வளர்ச்சி, 2018-19 ஆம் ஆண்டில் 14%க்கும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிவருவாயில் ஏற்பட்ட இந்த சாதகமான மாற்றத்தினால், 2018-19 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட 19,319 கோடி ரூபாயிலிருந்து வருவாய் பற்றாக்குறை 2019-20 ஆம் ஆண்டில் 14,315 கோடி ரூபாயாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ள நிலையில், அதன் கீழ் கிடைக்கப்பெறும் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க நிதியை தமிழகம் பெற்றுள்ளது. எனினும், மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வருவாயில் 2017-18 ஆம் ஆண்டில் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய 5,454 கோடி ரூபாய் அளவிலான பங்கையும், ஜிஎஸ்டி வரியில் 455.16 கோடி ரூபாய் அளவிலான உறுதி செய்யப்பட்ட இழப்பீட்டு தொகையும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலுவைத்தொகையை விடுவிப்பதில் மத்திய அரசு செய்யும் தாமதம் மாநிலத்தின் நிதி நிலைமை மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்தின் வருவாய் செலவினங்கள் உயர்ந்து வருவதால், மூலதன செலவினங்களையும், உட்கட்டமைப்பு திட்டங்களையும் அதிக அளவு மேற்கொள்வதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை".

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x