Published : 15 Feb 2019 03:16 PM
Last Updated : 15 Feb 2019 03:16 PM

திமுகவில் இணையும் அமமுகவினர்: ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்

அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைந்தார். இதையடுத்து, அமமுகவின் திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வி.வேட்டையன்,மாவட்ட விவசாய அணி, துணை அமைப்பாளர் பி.முத்துசமி, நிலையூர் கிளைச்செயலாளர் முருகன் ஆகியோரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன் மற்றும் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.பிரபு உள்ளிட்டோர் மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மதுரையில் இன்று காலை, டிடிவி தினகரனின் அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன் மற்றும் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஈரோடு எம்.பிரபு ஆகியோர்  தலைமையில், அமமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த பலரும் திமுகவில் இணைந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் பெரியசாமி, கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x