Published : 20 Feb 2019 01:42 PM
Last Updated : 20 Feb 2019 01:42 PM

வடக்கு, மேற்கு மண்டலங்களில் ஆதிக்கம் செலுத்தும் பாமக: ஆதாயம் அடையப்போகும் அதிமுக

வடக்கு, மேற்கு மண்டலங்களில் பாமகவுக்கு உள்ள பலத்தால் அதனுடனான கூட்டணி அதிமுகவுக்கு ஆதாயம் தருவதாக இருக்கும்.

இதனை உறுதிப்படுத்த இதற்கு முந்தைய தேர்தல் புள்ளிவிவரங்களைப் புரட்டிப் பார்த்தால் வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பாமக கணிசமான வாக்குகளைப் பெற்றது தெரியவரும்.

பாமக இந்த மண்டலங்களில் ஓர் அரசியல் கட்சியாக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் புரியும்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக பெற்ற வாக்கு விகிதங்களைப் பார்த்தோமேயானால், தருமபுரியில் 23.78%, சிதம்பரத்தில் 16.33%, அரக்கோணத்தில் 14.7%, கடலூரில் 11.3% என்ற அளவில் இருக்கிறது. வடக்கில் பிற மாவட்டங்களில் பலமாக இருந்தாலும் சென்னையில் மிகவும் பலவீனமாகவே இருந்திருகிறது.

8 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாமகவின் வாக்கு விகிதம் இரண்டு இலக்கங்களில் இருந்தது என்பது இன்னும் சுவாரஸ்யமானது. அதிலும் குறிப்பாக சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம் தொகுதிகள் தனித் தொகுதிகள்.

1990-களில் சிதம்பரம், காஞ்சிபுரம் தொகுதிகள் செங்கல்பட்டு தொகுதியாக இருந்தன. 2008-ல் சட்டப்பேரவை தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னரே அவர் தனித் தொகுதிகள் ஆகின. அப்போதும்கூட பாமகவே செங்கல்பட்டு தொகுதியில் ஆதிக்கம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாமகவுக்கு 7 சீட் வழங்கப்பட்டிருந்தாலும் எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னரே தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், தருமபுரி, ஆரணி, சிதம்பரம், கடலூர், காஞ்சிபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்தத் தொகுதிகள் பாமகவின் கோட்டை எனலாம்.

ஆளுங்கட்சியின் பிரமுகர் ஒருவர் கூட்டணி குறித்து கூறும்போது, ''பாமக எப்போதுமே தனது வாக்குகளை கூட்டணிக் கட்சிக்கு வெற்றி பெற்றுத்தரும் என்பது பாமகவுடன் கூட்டணி அமைப்பதில் கிடைக்கும் ஆதாயம்'' என்றார்.

மற்றுமொரு அதிமுக மூத்த நிர்வாகி கூறும்போது, ''அதிமுகவும் பாமகவும் இணையும்போது மேற்கு, வடக்கு மண்டலங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகிறது. 2009-ல் இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. திருவள்ளூர், விழுப்புரம், சேலத்தில் பாமகவின் பங்களிப்பு வெற்றியைத் தந்தது. அப்போது அதிமுக 9 தொகுதிகளைக் கைப்பற்றின'' என்று கூட்டணி பலன் குறித்துப் பேசினார்.

இதேபோல் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது, ''21 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு பாமகவுடனான கூட்டணி பலமாக அமையும். இதையெல்லாம் கருத்தில் கொண்டே அதிமுக பாமகவுடன் கூட்டணி அமைத்துள்ளது'' என்றார்.

சில புள்ளி விவரங்கள்:

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 116 இடங்களில் போட்டியிட்டது. 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆண்டிமடம், தாரமங்கலம், ஜெயங்கொண்டம், விருதாச்சலம், பென்னாகரம் ஆகிய 6 தொகுதிகளில்  30% வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றது. இந்த ஆறு தொகுதிகளுக்கான வாக்கு விகிதாச்சாரம் 3.64%. போட்டியிட்ட 116 தொகுதிகளிலும் சேர்த்து பெற்ற வாக்கு விகிதாச்சாரம் 7.61%.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 232 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஒரு தொகுதியில் கூட 30% வாக்கு பெறவில்லை. பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், தருமபுரி, ஜெயங்கொண்டம், எடப்பாடி ஆகிய பகுதிகளில் பெற்ற வாக்குகள் மட்டும் 25%-க்கு அதிகமாக இருந்தன. பாமகவின் ஒட்டுமொத்த வாக்கு விகிதம் 5.32% என்றளவிலும் போட்டியிட்ட 232 தொகுதிகள் அடிப்படையில் வாக்குவிகிதம் 5.41% என்றளவில் இருந்தது.

1996 மக்களவைத் தேர்தலில் பாமக 39 தொகுதிகளில் 15 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒட்டுமொத்தமாக 2.03% வாக்கு விகிதம் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x