Published : 11 Sep 2014 08:55 AM
Last Updated : 11 Sep 2014 08:55 AM
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான மூன்றாம் கட்ட கவுன்சலிங் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. கவுன்சலிங் முடிவில் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 73 பிடிஎஸ் இடங்கள் காலி ஏற்பட்டது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான மூன்றாம் கட்ட கவுன்சலிங் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. முதல் இரு நாளில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டது.
இந்நிலையில் தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 201 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான கடைசி நாள் கவுன்சலிங் புதன்கிழமை நடைபெற்றது. அன்று மாலை கவுன்சலிங் முடிவில் 128 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் 73 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் அதிகாரிகள் கூறியதாவது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான மூன்று கட்ட கவுன்சலிங் முடிவில் தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரியில் 73 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. தேவை ஏற்பட்டால் 4-ம் கட்ட கவுன்சலிங் நடத்தப்படும். இல்லை என்றால் 73 பிடிஎஸ் இடங்களை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிடுவோம். அவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள பிடிஎஸ் இடங்களை நிரப்பிக் கொள்வார்கள் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT