மக்களவைத் தேர்தல்; காங்கிரஸுக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 10 தொகுதிகள்: ஸ்டாலின் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல்; காங்கிரஸுக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 10 தொகுதிகள்: ஸ்டாலின் அறிவிப்பு
Updated on
1 min read

திமுக- காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதியுடன் சேர்த்து 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் தலைமையின் கீழ் கூட்டணி அமைகிறது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. அதன் பின்னர் திமுக -காங்கிரஸ் உறவு பலமாக இருந்து வருகிறது. ஆளுங்கட்சியை எதிர்த்து இரு கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

கூடுதல் தொகுதிகளில் நிற்கு முடிவெடுத்தது திமுக. இதனால் காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி தலைமை தலையிட்டு பேசியதன் அடிப்படையில் திமுக கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முன்வந்தது.

ஒற்றை இலக்கத்தை காங்கிரஸ் பெற விரும்பவில்லை. ஆகவே இரட்டை இலக்கமாக வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைக்க தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று மாலை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோர் சென்னை வந்தனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.ஆர்.ராமசாமி, கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் அறிவாலயம் வந்த அவர்கள் ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் ஸ்டாலின், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்கள் இதை அறிவித்தனர். அதன்படி காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in