Published : 06 Feb 2019 02:30 PM
Last Updated : 06 Feb 2019 02:30 PM

திருநாவுக்கரசரை சந்தித்த ரஜினிகாந்த் - திருமாவளவன்: காரணம் என்ன?

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை, ரஜினிகாந்த் மற்றும் தொல். திருமாவளவன் ஆகியோர் சந்தித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இரு தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றபோது, அங்கு தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ரஜினிகாந்தை சந்தித்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே அவரின் பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

எனினும், தான் ரஜினியை அமெரிக்காவில் சந்திக்கவில்லை எனவும், அவர் தன்னுடைய நீண்ட கால நண்பர் எனவும் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்தார். மேலும், ராகுல் காந்தி பிரதமராக உழைப்பேன் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், திருநாவுக்கரசரின் அண்ணா நகர் இல்லத்தில், இன்று (புதன்கிழமை) மதியம் ரஜினிகாந்த் திடீரென சந்தித்தார். அப்போது, திருநாவுக்கரசர் இல்லத்தில் ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இருந்துள்ளார். மூவரும் தமிழக அரசியல் நிலைமை குறித்துப் பேசியதாகவும், இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

தனது இளைய மகள் சவுந்தர்யாவின் திருமண அழைப்பிதழை திருநாவுக்கரசருக்குக் கொடுக்க ரஜினிகாந்த் அவரது இல்லத்திற்குச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அண்மையில் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய 'தேசம் காப்போம்' மாநாட்டில் கலந்துகொண்டதற்காக திருநாவுக்கரசருக்கு நன்றி தெரிவிக்க திருமாவளவன் வந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், தன் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்காத ரஜினிகாந்த் உடன் திருமாவளவன், திருநாவுக்கரசரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x