

“பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கு குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
இதன்மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவர் என்றும், வரவிருக்கும் நிதியாண்டில் விவசாயிகளின் இந்த உதவி திட்டத்துக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி முன்மொழியப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிச.2018 தொடக்கத்தில் இருந்து விவசாயிகளுக்கு உதவி வழங்கும் இத்திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு, அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரும்படி விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் வேளாண், வருவாய், ஊரக வளர்ச்சித் துறையினர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று இம்மாத இறுதிக்குள்ளாகவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த ஆயத்தமாகி வருகின்றனர். திட்டம் அறிவிக்கப்பட்டு 15 தினங்களுக்கு மேலாகியும், இத்திட்டம் விவசாயிகளை சென்றடையாததால் விவசாயிகள் விண்ணப்பிக்க வரவில்லை.
வருவாய் துறையினர், ஒவ்வொரு கிராமத்திலும் தண்டோரா போட்டும், ஆட்டோவில் ஒலிபெருக்கி அமைத்தும் விளம்பரம் செய்து வருகின்றனர். விஏஓக்கள் மூலமாக விவசாயிகளுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. விவசாய சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் விண்ணப்பம் விநியோகிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
கடலுர் மாவட்டத்தில் சார்-ஆட்சியர் எம்.சரயு, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்டப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே ஒவ்வொரு கிராமமாக சென்று, ஆய்வு நடத்தி, விவசாயிகளிடம் இருந்து உடனடியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அவற்றை திரும்பப் பெற்று, பதிவேற்றம் செய்யும்படி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆணை பிறப்பித்தார்.
பெரு விவசாயி அல்லது சிறு விவசாயி என்பதற்கான சரிபார்ப்பு பணிகளை பின்னர் பார்த்துக் கொள்ளலாம், ஒருவர் விவசாயி என அறியும்பட்சத்தில் அவரது விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும்படி வாய்மொழியாகவும் ஆணை பிறப்பித்திருப்பதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் நேற்று கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விநியோகித்து வருகின்றனர்.
விண்ணப்பங்களை 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுஉள்ளதாகவும், மார்ச்சில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.