Published : 16 Feb 2019 10:20 AM
Last Updated : 16 Feb 2019 10:20 AM

சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் உயிர்த்தியாகம்; சோகத்தில் தவிக்கும் சவலாப்பேரி கிராமம்: தேசத்தொண்டிலும், விளையாட்டிலும் இளைஞர்களை ஊக்குவித்தவர்

காஷ்மீரில் தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த, கோவில்பட்டி அருகே சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் (28) குறித்து உருக்கமான தகவல்களை அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பகிர்ந்து கொண்டனர்.

சுப்பிரமணியனுக்கு கடந்த பொங்கல் தலைப்பொங்கல் என்பதால் ஊருக்கு வந்து, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார். தனது தந்தை கணபதியை திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைக்கு சேர்த்து, பரிவுடன் கவனித்துக் கொண்டார். தந்தைக்கு பதில் விவசாயப் பணிகளையும் கவனித்துக் கொண்டார்.

மனைவி கதறல்

கணவரை இழந்த துக்கம் தாங்காமல் அவரது மனைவி கிருஷ்ணவேணி கதறியழுதவாறு கூறியதாவது: ``சுப்பிரமணியன் எப்போதும் கலகலப்பாக பேசுவார். அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார். நேற்று முன்தினம் மதியம் என்னிடம் செல்போனில் பேசியபோது, குடும்பத்தினர் நலன் குறித்து விசாரித்தார். தற்போது கான்வாயில் சென்று கொண்டிருக்கிறேன். பின்னர் பேசுகிறேன் என்றார். அதன் பின்னர் அழைக்கவில்லை. மதியம் வரை அவருக்கு ஒன்றும் நடந்திருக்காது என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அவர் உயிரிழந்ததை என்னால் நம்பவே முடியவில்லை’’ என்றார் கண்ணீருடன்.

தந்தை சோகம்

தந்தை கணபதி சோகம் மேலிட கூறும்போது, ‘‘சீருடை பணியில் சேர வேண்டும் என்பதே சுப்பிரமணியனின் ஆசை. அவரது விருப்பப்படியே சிஆர்பிஎப்-ல் பணி கிடைத்தது. இன்று நாட்டுக்காக அவர் தனது உயிரை தியாகம் செய்துள்ளார்” என்றார்.

நண்பர்கள் உருக்கம்

சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் கூறும்போது, ‘‘சுப்பிரமணியனுக்கு நாட்டுப்பற்று அதிகம். கிராமத்தில் உள்ள இளைஞர்களை ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்துவார். இதற்கான தேர்வை எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளித்து ஊக்கப்படுத்துவார். விளையாட்டின் மீது தீராத ஆசை கொண்டவர். விடுமுறையில் வந்த போது கூட பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்து நடத்தினார். அவருடைய மரணம் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு’’ என்றனர்.

பள்ளியில் அஞ்சலி

சுப்பிரமணியன் படித்த டிஎன்டிடிஏ பள்ளியில் அவரது மறைவுக்கு மாணவ, மாணவிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். அவருக்கு பாடம் எடுத்த ஆசிரியை சுசீலா கூறும்போது, ‘‘அவர் மரணமடைந்த செய்தியை கேட்டது பேரதிர்ச்சியாக இருந்தது. 2-ம் வகுப்பில் அவருக்கு நான் பாடம் எடுத்த போது இருந்த அவரது சிறுவயது தோற்றம் என் நினைவுக்கு வந்தது. எப்போதும் அவர் சுறுசுறுப்பாக இருப்பார். வேலையில் சேர்ந்த பின்னர் கூட, என்னை எங்கு சந்தித்தாலும், மரியாதையுடன் வணக்கம் செலுத்துவார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x