Published : 09 Feb 2019 02:33 PM
Last Updated : 09 Feb 2019 02:33 PM

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் சேர விருப்பம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக இருக்கின்றன.

விருப்ப மனுக்கள் வாங்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தொண்டர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா அலை தமிழ்நாட்டில் உள்ளது. இந்த அலை முன்பு மற்ற அலைகள் காணாமலே போய்விடும். அரசியல் கட்சிகளுக்குப் பரீட்சை நேரம் இது.

பல கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. எந்தெந்த கட்சிகள் என இப்போது சொல்ல இயலாது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே எங்களுடன் சேருவதற்கு விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள். எந்தெந்த கட்சிகள் என்பது ரகசியம்" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அப்போது, அதிமுக பாஜகவுடன் இணையாது என திருமாவளவன் கூறியுள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஜனநாயகத்தில் யார் வேண்டுமனாலும் எந்தக் கருத்தையும் சொல்லலாம். அதற்கு யாரும் தடை போட முடியாது. அது அவர்கள் சுதந்திரம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி அறிவிக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x