Published : 22 Feb 2019 10:35 AM
Last Updated : 22 Feb 2019 10:35 AM

தேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்: பிப்.24 முதல் மனுக்களைப் பெறலாம் என விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், நாளை மறுநாள் முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் பதினேழாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேமுதிகவின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் நாடாளுமன்றத் தேர்தல் விருப்ப மனுக்களை 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 06.03.2019 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், நாடாளுமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 20 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x