Last Updated : 04 Feb, 2019 08:22 AM

 

Published : 04 Feb 2019 08:22 AM
Last Updated : 04 Feb 2019 08:22 AM

தொடரும் காவலர்களின் மரணங்கள்; பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது: மனநல மருத்துவர் அறிவுரை

தற்கொலை செய்து கொள்வது எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல என மன நல மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக காவல் துறையில் போலீஸார் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது. குறிப்பாக சென்னையில் போலீஸாரின் தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளன. 2016-ல் பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் கோபிநாத் என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்தாண்டு மார்ச் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அருண்ராஜ் (27) என்ற ஆயுதப்படை காவலர் அதே பாணியில் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார். அதே மாதத்தில் அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஸ் குமாரும் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தொடர்ந்து கொருக்குப்பேட்டை சிறப்பு எஸ்ஐ ஜோசப், கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் காவலர் பாலமுருகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இப்படி தமிழகம் முழுவதும் 2008 முதல் 2017 வரை 295 போலீஸார் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தமிழகத்தில்தான் போலீஸார் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 27 போலீஸார் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. போலீஸாரின் தற்கொலைக்கு மன அழுத்தம், மன இறுக்கம், வேலைப் பளு, அதிகாரிகளின் அழுத்தம், உடல் நலக்குறைவு உட்படபல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதுகுறித்து கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை முன்னாள் இயக்குநர் சத்தியநாதன் கூறியதாவது:சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தாமல் வேறு மாவட்டத்தில் பணியமர்த்துதல், பணி மாறுதலால் குடும்பத்தினரை பிரிந்து இருந்தல், முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத விரக்தி, பிற துறைகளுக்கு இணையான சம்பளம் வழங்காமை, உயர் அதிகாரிகளின் தொந்தரவு உட்பட 8 காரணங்கள் போலீஸாரின் மன அழுத்தத்துக்கு காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. எனவே பிரச்சினை என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மனச் சோர்வு ஏற்பட்டால் நமது நலன் விரும்பிகளிடம் வெளிப்படையாக பேச வேண்டும். கவலை எல்லோருக்கும் உள்ளது. அதை புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் அதிக அளவு தற்கொலை எண்ணத்துக்கு தள்ளப்படுகின்றனர். வெற்றி - தோல்வி இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருமுடிவுக்கு வரும் முன் நம்மை பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களையும் நம்மை சார்ந்தவர்களையும் ஒரு முறை நினைத்து பார்த்தால் தற்கொலை முடிவு வெற்றி பெறாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x