Last Updated : 01 Feb, 2019 09:46 AM

 

Published : 01 Feb 2019 09:46 AM
Last Updated : 01 Feb 2019 09:46 AM

’பெரியோர்களே... தாய்மார்களே’ - முதலில் சொன்னவர் யார் தெரியுமா? அவரின் பிறந்தநாள் இன்று!

 - இன்று ஓமந்தூரார் பிறந்த நாள் -1.2.2019

இன்று அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், கலைஞர்கள் எல்லோரும் தாங்கள் பேசத் தொடங்கும்போது ’பெரியோர்களே... தாய்மார்களே’ என்று சொல்லி தொடங்குகிறார்களே... இதனை முதன்முதலில் கையாண்டதுடன், அதனை தனது வாழ்நாள் முழுக்கவும் தொடர்ந்து பயன்படுத்தியவர் முதல்வர்களின் முதல்வர் என்றழைக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரே ஆவார்.

அவருடைய பிறந்தநாள் இன்று.  நேர்மையின் சிகரமாகவும், உண்மையின் உரைகல்லாகவும் திகழ்ந்த அவரைப் பற்றிய அற்புதமான தகவல்களை தெரிந்துகொள்வோமா?

  1. தமிழகத்தில் - திண்டிவனத்துக்கு அருகில் இருக்கும் ஓமந்தூர் என்ற ஊரில் 1-2-1895ம் ஆண்டு பிறந்தவர் ஓமந்தூர்பி. ராமசாமி ரெட்டியார்.
  2. இவர் தமிழக மக்களால் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்டார்.

3.  இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், காந்தியச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். 

4.   நேர்மையும் தூய்மையுமே அவரை முதல்வர் நாற்காலியில் ஆசையோடு அழைத்துவந்து அமர வைத்தன. 

5.  சுதந்திர இந்தியாவில் - தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராக பதவியேற்றவர் - ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். 

6. ஓமந்தூரார் 1947-ம் ஆண்டு மார்ச் 23 முதல் 1949-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி வரை சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று பட்டேலுக்கு எச்சரிக்கை செய்தார். அதன்பின்னர் அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்திய தேசத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது.

7. காமராஜர் ஆதரவுடன் 1947-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவர். விவசாயிகள், மற்றும் ஏழை, எளியவர்களின் முன்னேற்றத் துக்காக சிந்தித்து பல முனைப்புகளை தொடங்கியவர்.

9.  ஓமந்தூராருக்கு முன்பு சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த ஒன்பது முதலமைச்சர்களும் அரச வம்சத்தையும், ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் உயர்கல்வி பயின்றவர்கள். ஓமந்தூரார்  சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 8-ம் வகுப்பு வரையே படித்தவர்.

10, ஓமந்தூரார் முதல்வர் பதவியில் இருந்தபோது - கட்சிக்காரர்களுக்கோ, தன் குடும்பத்தினருக்கோ எந்த விதச் சிறு சலுகைகளோ வேலைவாய்ப்புகளோ அவர் வழங்கவே இல்லை.

11.  இரண்டாண்டுகள் முதல்வர் பதவியில் இருந்த ஓமந்தூரார் - மிகவும் நேர்மையான ஆட்சியை  இந்த இரண்டாண்டுகளில் வழங்கினார்.

12.  கட்சிக் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்பதற்காகவும், சுதந்திரமாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்காகவும்...  கட்சித் தலைவர் - முதலமைச்சர் ஆகிய இரண்டு பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட அவர் பயணித்த அரசியல் பாதையில்தான், பின்னாட்களில் குமாரசாமி ராஜாவும் காமராஜரும் நடைபோட்டனர்.

13.  ஆதிதிராவிடர்கள், ஹரிஜனர்கள் என அழைக்கப்பட்ட அந்தக் காலத்தில், அவர்களுக்கென்று தனித் துறை இல்லை. தொழிலாளர் நலத் துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத் துறை இருந்தது. ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அந்தத் துறையை ஆதிதிராவிடர் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து, தனித் துறையாகப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஒரு ஆணையரை நியமித்தார். எனவே அவர் இன்றைக்கும் ஆதிதிராவிட நலத் துறையின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

14. அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதி திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தவர் ஓமந்தூரார்தான். 

  ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் நுழைவதற்கான தடையை முழுவதுமாக நீக்கி, தமிழ்நாட்டின் பல முக்கியக் கோயில்களில் ஆதிதிராவிடர்களைப் பிரவேசிக்க வைத்த பெருமைக்குரியவர் ஓமந்தூராரே!

15.  ஓமந்தூரார் - தான் முதல்வர் பதவியேற்றிருந்த காலத்தில்  ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும்  தோற்றுவித்த்தை வரலாறு என்றைக்கும் நினைவில் வைத்திருக்கும்.

16.  சென்னை மாகாணத்தில் இருந்த, திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க வைத்ததோடு நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனையாகும்.

17. ஓமந்தூரார் முதலமைச்சராகப் பதவியேற்றதும் பிறப்பித்த ஆணைகள் அனைத்தும் கொண்டாடப்பட வேண்டியவை. அவர் பதவி ஏற்றதும் செய்த முதல்  வேலை என்ன தெரியுமா? பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடை போட்டதுதான். ஆம், அதுவரை எந்த இந்திய மாகாண முதல்வர்களும் செய்யாத நடவடிக்கைகள் இவையாகும். 

19. மிக மிக அவசியமான தருணங்களில் மட்டுமே ஓமந்தூரார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தனிப்பட்ட பேட்டிகள், புகைப்படம் எடுப்பது போன்ற எதற்கும் அவரிடம் எளிதில் அனுமதி வாங்கவே முடியாது. அதனாலேயே அவரின் புகைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே இன்று நமக்குக் கிடைக்கின்றன. 

20. முதலமைச்சரைச் சந்திப்பதற்கென வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், என்ன காரணத்துக்காகச் சந்திக்க வேண்டும் என ஒரு கேள்வியை இணைக்கும்படி  முதன்முதலில் உத்தரவிட்டவர் ஓமந்தூரார்தான். . நியாயமான காரணத்துக்காக வருவோரை மட்டுமே சந்திப்பது என்பதை  தான் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதலே வழக்கமாக்கிக்கொண்டார் அவர். 

21. தனிப்பட்ட சலுகைகள், பரிந்துரைகளுக்காக வருவோரை  ஓஅம்ந்தூரார் தன்னை சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்.

22. ஓமந்தூரார் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிரிட்டிஷ் இந்தியாவில், அந்தக் காலகட்டத்தில் மாகாண முதலமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்கள் அனைவரும் அப்போது  ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரிகளாகவே இருந்தனர். தான் பதவி ஏற்றவுடனேயே ஓமந்தூரார் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டார். அது என்ன தெரியுமா? ஐ.சி.எஸ். அந்தஸ்து இல்லாத ஏ.அழகிரிசாமி என்பவரைத் தனது அந்தரங்கச் செயலாளராக நியமித்துக்கொண்டார். சென்னை மாகாண முதலமைச் சர்களின் அந்தரங்கச் செயலாளர்களில் முதல் தமிழர் என்ற பெருமைக்குரியவர் ஏ.அழகிரிசாமி. பின்னாட்களில் அவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.

23. ஓமந்தூரார், முதலமைச்சராகப் பதவி வகித்த 2 ஆண்டு காலமும் நாட்டு நலன், மக்கள் நலன் என்ற இரட்டைக் கொள்கைகளில் இருந்து எள்ளளவும் பிறழாமல் பணியாற்றினார். 

24.  ஓமந்தூராரின் ஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த மிக முக்கியமான சட்டங்கள் -ஆலயப் பிரவேசச் சட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் போன்றவையாகும்.

25.  ஓமந்தூராருக்கு முந்தைய பிரகாசம் ஆட்சியில் சென்னை மாகாணத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்தது. பக்கத்து மாவட்டங்களில் கள்ளுக்கடைகள் இருந்ததால், அந்தச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. ஓமந்தூரார் முதலமைச்சரானதும் எஞ்சிய 17 மாவட்டங்களிலும் மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் 25 மாவட்டங்களைக் கொண்ட சென்னை மாகாணம் முழுவதும், ஒரே நாளில் கள்ளுக்கடைகள் இழுத்து மூடப்பட்டன. 

26. முதல்வராக இருந்தபோது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஓமந்தூரார். மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ எனக்குத் தரக் கூடாது என்றும் வெளிநாட்டில் இருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்த எளிய அரசியல்வாதி இவர்.

27.அவரின் நேர்மையான ஆட்சியால் பாதிப்படைந்த ஜமீன்தார்களும், மடாதிபதிகளும், சில அரசியல்வாதிகளும்  இணைந்து அவரைப் முதல்வர் பதவியில் இருந்து இறக்கத் திட்டமிட்டனர். கட்சியின் நிர்ப்பந்தத்தால் பதவி விலக நேரிட்டபோது  அவர் சிறிதும் கவலை கொள்ளாமல் பதவியை தூக்கியெறிந்தார்.

28.  பதவி விலகிய அன்று பிற்பகலிலேயே அரசுக் குடியிருப்பான கூவம் மாளிகையில் இருந்து வெளியேறி, தனது சொந்த ஊரான ஓமந்தூருக்கு சென்றுவிட்டார். 

29. முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின்னர், ஓமந்தூராரின்  அரசியல் வாழ்வை முற்றிலுமாகத் துறந்தார். இதையடுத்து மனம் முழுமையாக ஆன்மிகத்தில் லயித்துப் போக, வள்ளலார் வாழ்ந்திருந்தவடலூரிலேயே வசிக்கத் தொடங்கிவிட்டார்.  இல்லை - வாழத் தொடங்கிவிட்டார்.

30. ஆன்மிகத்தில் ஈடுபட்டாலும் - தனது மரபார்ந்த  விவசாய வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்பட்டு, தனது வியர்வை சிந்தும் உழைப்பால் வடலூர் பகுதியில் இருந்த தரிசு நிலங்களை எல்லாம் - விளைநிலங்களாக மாற்றினார்.

31.  இன்று  அனையா ஜோதியாக வெளிச்சம் சிந்தும் - வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவ இவர்தான் முன்னின்றார்l  வடலூரில் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அனாதைகள் இல்லம், ஏழை மாணவர்களுக்கான குடில், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் ஆகிய நிறுவனங்களை   ஓமந்துரார் ஏற்படுத்தினார்.

32.  25-8-1970 அன்று தனது 75 -வது வயதில் உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் காலமானார்.

33.  இவ்வளவு சாதனைகளை செய்துவிட்டு, நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் திகழ்ந்த ஓமந்தூராருக்கு - தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில்ஒரு சிலைகூடக் கிடையாது என்பது  துயர்மிகுந்த செய்தி.

- எஸ்.ராஜகுமாரன்

s.raajakumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x