Published : 10 Feb 2019 05:22 PM
Last Updated : 10 Feb 2019 05:22 PM

எந்தக் கட்சியையும் மிரட்டி கூட்டணி வைக்க முடியாது: ஸ்டாலினுக்கு இல.கணேசன் பதில்

அதிமுகவை மிரட்டி தேர்தல் கூட்டணிக்கு பாஜக அடிபணிய வைத்துவிட்டது என்று திமுக தலைவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று ஒரு திருமண நிகழ்வில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''பாஜகவும் அதிமுகவும் கூட்டணி வைப்பதற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அதிமுக கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒருவேளை கூட்டணி வைத்தால் டெபாசிட் காலியாகி விடும் என ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், மோடி இவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார். நீங்கள் தோற்பீர்களோ? ஜெயிப்பீர்களோ? எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், ஐ.டி ரெய்டு. ஆதாரங்கள் கையில் இருக்கிறது. குட்கா ஆதாரம், எடப்பாடி பழனிசாமி ஊழல் ஆதாரம் எல்லாம் இருக்கிறது. 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பழி வாங்கி விடுவோம் என மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த மிரட்டலுக்குப் பயந்து கூட்டணிக்கு அதிமுக தயாராகி விட்டது. இந்நிலையில் இவர்கள் ஒரு நிபந்தனை வைத்திருக்கிறார்கள். என்னவென்றால், இந்த 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வேண்டாம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று கொஞ்ச நாளைக்காவது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம் என அதிமுகவினர் கேட்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை'' என்று பேசினார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ஸ்டாலின் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த இல.கணேசன், ''அரசியல் பற்றித் தெரியாதவர்கள் வேண்டுமானால் இதுபோலப் பேசலாம். சிறிய கட்சிகள் கூட அதாவது நாடாளுமன்றத்திலோ,  சட்டப்பேரவையிலோ அதிகமான உறுப்பினர்கள் அல்லது ஒரு உறுப்பினரும் இல்லாத கட்சியாக இருந்தாலும் கூட அந்தக் கட்சிகளை மிரட்டி கூட்டணி வைக்க முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் தலைவர்கள், தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று சுயமரியாதை, கவுரவம் இருக்கிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x